Also Watch
Read this
கர்நாடகாவில், காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 யானைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை வாரி சுருட்டி, சினங்கொண்டு உயிரை குடித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது. இடுப்பில் தனது மகளை வைத்துக்கொண்டு மனைவியையும் காப்பாற்ற முயன்ற கணவரின் செயல் பலரது கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைத்துள்ள நிலையில் சுற்றுலா சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சம்பவம் பலரையும் பதற வைத்துள்ளது.

காண்போரைக் கலங்க வைத்த...
தனது பிஞ்சு மகளை இடுப்பில் இடுக்கிக்கொண்டு கணவரும் எவ்வளவோ போராடிதான் பார்த்தார். ஆனால், சினங்கொண்டு பிளிறிய யானைகளின் பிடியில் இருந்து மனைவியை மீட்க முடியவில்லை. இந்த சம்பவம் ஆற்றங்கரையில் சுற்றி இருந்தவர்களை மட்டுமல்ல வீடியோவை பார்க்கும் அத்தனை பேரையுமே கண்கலங்க வைத்துள்ளது.

பல்லாவரத்தில் இருந்து...
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தை சேர்ந்தவர் ஜிம்னு. இவர் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது, துபாரே யானைகள் முகாமிற்கு சென்ற அவர்கள் அங்குள்ள வளர்ப்பு யானைகள் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்ததை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். பாகன்கள் உதவியுடன் யானைகள் குளித்துக் கொண்டிருந்த காட்சியை ஆற்றங்கரையில் நின்றுகொண்டு அனைத்து சுற்றுலா பயணிகள் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென கஞ்சன் மற்றும் மார்த்தாண்டா ஆகிய 2 யானைகளுக்கிடையே சண்டை மூண்டது.

மோதிக் கொண்ட யானைகள்
பாகன்கள் கட்டுப்படுத்த முயன்றும் பிளிறிய கஞ்சன், மார்த்தாண்டா மீது தும்பிக்கையால் தாக்கியது. இதில் நிலைதடுமாறி மார்த்தாண்டா கீழே விழ, அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ஜிம்னுவும் கீழே விழுந்தார். 2 யானைகளும் முழுபலத்தையும் காட்டி ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோத இடையில் சிக்கிய ஜிம்னுவும் அதில் இருந்த மீள முடியவில்லை. கஞ்சனும், மார்த்தாண்டாவும் வாரி சுருட்டி, மாறி மாறி காலால் கழுத்தில் மிதித்தும், முகத்தை அமுக்கியும் ஜிம்னுவின் உயிரை நீருக்குள்ளேயே குடித்தது.

பரிதவித்த கணவர்
இடுப்பில் தனது மகளை வைத்துக்கொண்டு பரிதவித்த ஜிம்னுவின் கணவர் முடிந்தவரை மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவ்வளவு பெரிய உருவம்கொண்ட 2 யானைகளின் பலத்திற்கு மத்தியில் அவரது முயற்சி தோற்றுத்தான் போனது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கர்நாடகா அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.

யானைகள்... அறிவுறுத்தல்...
இந்த வீடியோவை பார்த்து பலரும் பதறிப்போய் இருக்க, பழக்கப்பட்ட யானைகள்கூட சிலநேரங்களில் இப்படி நடந்து கொள்வதுண்டு எனக்கூறும் விலங்கு நல ஆர்வலர்கள் யானைகளின் அருகே சென்று வாழைப்பழம் கொடுப்பது, உணவுகளை வழங்குவதை தவிர்ப்பது நலம் என கூறுகின்றனர். அதேபோல், யானைகளின் அருகில் சென்று செல்பி எடுப்பது, தும்பிக்கையை தொட்டு விளையாடுவது, யானைகளை குளிக்க வைப்ப ஆசைப்படுவது உள்ளிட்டவற்றையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறுகின்றனர்.

கட்டுங்கடங்காத கோபம் வருவது ஏன்?
எவ்வளவு சாதுவாக இருந்தாலும் கோபம் என்று வந்துவிட்டால் விலங்குகளை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, எனவே அவற்றிடம் இருந்து தூரத்தை கடைபிடிப்பதுதான் பாதுகாப்பு எனவுடம் கூறுகின்றனர் சமூகநல ஆர்வலர்கள். இதுஒருபுறமிருக்க, வளர்ப்பு யானைகளுக்கு கோபம் வருவதற்கு கடுமையான உடல்வலி, உடலியல் மாற்றங்கள், மனஅழுத்தம், இயற்கை சுழற்சியான மதம் பிடித்தல் ஆகியவை முதன்மை காரணங்களாக உள்ளன.

வனத்துறை விசாரணை
யானைகளை அடிப்பதும், சரியாகக் கவனிக்காமல் துன்புறுத்துவதும் அவற்றிற்கு கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் பாகன் அப்படி ஏதாவது இடையூறு ஏற்படுத்தினாரா? அதனால்தான் யானை கஞ்சனுக்கு முதலில் சினம் வந்து மார்த்தாண்டாவை தும்பிக்கையால் தள்ளியதா? என்பதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

நம்மை நாமே...
அதேபோல், ஆண் யானைகளுக்கு இயற்கையாகவே ஹார்மோன் மாற்றங்களால் 'மஸ்த்' எனும் நிலை ஏற்படும். அப்போது அவற்றின் கண்ணின் அருகில் நீர் வழியும், இந்த காலகட்டத்தில் யானைகள் மிகவும் ஆக்ரோஷமாக மாறும் என்பதால் மஸ்த் நிலை ஏற்பட்டதா?எனவும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. எது எப்படியோ விலங்குகளின் அருகில் செல்லாமல் நம்மை நாமே தற்காத்துக்கொள்வது மிக முக்கியமான ஒன்று என்பதற்கு ஜிம்னுவின் இழப்புதான் சாட்சி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved