Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்ற நிலையில் கட்சி இருப்பதாக செம்மலை வருத்தம் தெரிவித்து உள்ளார். அதிமுக பலவீனம் அடைந்து கொண்டே வருவதாகவும் இனியாவது கட்சியில் இருந்து யாரையும் நீக்காமல் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதிமுகவில் இருந்து விலகல்
இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாவது;
அதிமுகவில் இருந்து, வேதனையோடு கனத்த இதயத்தோடு விலகுகிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எனக்கு பல்வேறு வாய்ப்பு தந்து அழகு பார்த்தனர். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்து எம்.ஜி.ஆர் உடன் பயணித்தேன். பிறகு, அம்மா உடன் பயணித்தேன். அந்த இரு ஆன்மாக்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து, அவர்களிடம் மன்னிப்பை கேட்க கடமைப்பட்டவனாக உள்ளேன். எனது விலகலுக்கு பிறகாவது இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டும்.

ஈகோவை விடுத்து...
அதிமுக இருந்தால்தான் தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு. கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், இனிமேலாவது தங்களுக்கு இருக்கும் ஈகோவை விட்டு விட்டு, செய்ய தவறிய குறைபாடுகளை நீக்கி அதிமுகவை காப்பாற்ற வேண்டும், வளர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். இது கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.
போனது போக எஞ்சி இருப்பதாவது மிஞ்சுமா? யாரையும் நீக்குவதோ, மற்றவர்களை ஒதுக்கும் நடவடிக்கையை எடுக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அதிமுகவை காப்பதுதான், என்னுடைய விருப்பம்.

அதிமுகவின் நலன்
கட்சிக்கு குந்தகமாக இருக்கும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதிமுகவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் மனப்பான்மை இருக்கக் கூடாது. கட்சியின் நலனை பார்க்க வேண்டும்.

மதிக்கவே இல்லை
அதிமுகவை, தவெக தலைவர் விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை ஒரு வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே அதற்கு காரணம். இதில், விஜயையோ, பிறரையோ குறைசொல்ல முடியாது. அதிமுக தலைவர்களிடையே ஈகோ பிரச்சனை. கட்சியை வளர்க்கும் எண்ணமே அவர்களுக்கு இல்லை. அதிமுக பலவீனம் அடைந்துகொண்டே செல்கிறது.
கட்சியில் பயணிக்க மனம் இடமளிக்கவில்லை. வேறு எந்தக் கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை.
இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved