Also Watch
Read this
Posted on: Mar 01, 2026 01:32 PM
By: Manigandan Raja

பரிசோதனை முடிவுகளை பதிவேற்றிய சிறுமி :
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 50-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் வந்து செல்கின்றனர்.
இங்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள் எனப் பலரும் இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளுக்காக மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆய்வகத்தை நாடுகின்றனர். இரத்த மாதிரிகளைச் சோதித்து அதன் முடிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியில் மருத்துவப் பணியாளர்கள் ஈடுபட வேண்டும்.
ஆனால், அங்கு பள்ளிச் சிறுமி ஒருவர் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்து, நோயாளிகளின் பரிசோதனை முடிவுகளைத் தீவிரமாக கணினியில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் கூறுகையில், "மருத்துவப் படிப்பு அல்லது முறையான பயிற்சி இல்லாத ஒரு சிறுமி, கவனக்குறைவாக முடிவுகளைத் தவறாகப் பதிவேற்றம்
செய்தால், அதன் அடிப்படையில் அளிக்கப்படும் சிகிச்சை நோயாளிகளுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
குறிப்பாகச் சர்க்கரை அளவு மற்றும் இரத்த வகை போன்ற முக்கிய முடிவுகளில் தவறு நடந்தால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம்" என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனையின் இத்தகைய அலட்சியப்போக்கு பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட நிர்வாகமும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved