Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 09:25 AM
திருவள்ளூர், ஊத்துக்கோட்டை 4 வழிச் சாலை பணிகளில் அலட்சியம் காரணமாக, மாணவி உயிரிழந்தார்.
டூவீலரில் சென்ற போது விபத்து
திருவள்ளூர் மாவட்டம், அடுத்த பென்னலூர்பேட்டை சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த முனிகிருஷ்ணன், சரளா தம்பதியின் மகள் காவியா. இவர், திருவள்ளூரில் உறவினர் வீட்டில் தங்கி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், உறவினர் வீட்டில் இருந்து தனது சகோதரன் உடன் இருசக்கர வாகனத்தில் சொந்த கிராமமான பென்னலூர்பேட்டை சீனிவாசபுரம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூண்டி அடுத்த கேஸ் குடோன் பகுதியில் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதுவது போல் வந்ததால், இருசக்கர வாகனம் நிலை தடுமாறி, ஊத்துக்கோட்டை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்தது. இதில், காவியாவின் தலையில் கம்பி குத்தி பலத்த காயமடைந்தார்.
விபத்தால் விபரீதம்
இதனை அடுத்து, காவியா மற்றும் அவரது சகோதரன் பிரவீன் ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள், இருவரையும் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காவியாவை மருத்துவர்கள் பரிசோதித்ததில், காவியா வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உறவினர்கள் அதே இடத்தில் கத்தி கூச்சலிட்டு அழுதனர். லேசான காயங்களுடன் காவியாவின் சகோதரன் பிரவீன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி காவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது மக்கள் கடும் குற்றச்சாட்டு
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;
திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை பணிகள் 85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் விடப்பட்டு, 15 மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், பணிகளுக்காக சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் விபத்து நடைபெற்ற பகுதி இருள் சூழ்ந்த பகுதியாக இருந்த போதிலும், நெடுஞ்சாலைத்துறை சார்பில் எந்த ஒரு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், அதை சுற்றி எந்த ஒரு பாதுகாப்பு பதாகைகளும் வைக்கப்படாமல் இருந்ததே விபத்திற்கான காரணம்.
இவ்வாறு பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
முன் கூட்டியே செய்து இருந்தால்...
விபத்து ஏற்பட்டு பள்ளி மாணவி உயிரிழந்த பின்னர், பள்ளத்தை சுற்றிலும் பேரிகார்டுகள் அமைத்து ஸ்டிக்கர் ஓட்டும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதனை முன்கூட்டியே செய்திருந்தால் மாணவி உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளதுடன், உடனடியாக இதுபோன்ற சாலை ஓரங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடவும், பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவும் வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved