Also Watch
Read this
By: Manigandan Raja

கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் :
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நாவினிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட என்.பெருமாள்பட்டியில் உள்ள ஆதிநகரில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குடியிருப்பு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட போது பாலர் பள்ளி விளையாட்டு மைதானமாக சர்வே எண் 592/1A-ல் 52 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சிலர் அந்த இடத்தை
ஆக்கிரமித்து குடியிருப்பவர்களை மிரட்டி வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், இதனை கண்டித்து, ஆதிநகர் பகுதியில் உள்ள வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பாலர் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட 52 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தருவதுடன், சாலை மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், இவ்விவகாரத்தில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டமாக ரேஷன் கார்டுகளை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved