Also Watch
Read this
அதிமுகவின் வாக்குகள் சிதறாமல் இருக்கவும், மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், பாஜக உடன் கூட்டணி வைத்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறி வரும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் என்றும் கண்டனம் தெரிவித்தார்.

தஞ்சையில் இபிஎஸ் பிரச்சாரம்
தஞ்சாவூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
தஞ்சாவூர் என்றால் பொன் விளையும் பூமி. இந்த பூமியை ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார். உங்கள் நிலத்தை அபகரித்தவரின் ஆட்சி தொடர வேண்டுமா? எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது காவிரி பிரச்னைக்கு நீதிமன்றம் சென்றது. அவருக்குப் பின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நியாயத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அவர் இருக்கின்றபோதே நாம் தீர்ப்பை பெற்றோம். ஆனால் மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் இதில் திமுக கவனம் செலுத்தவில்லை. ஜெயலலிதா தொடர்ந்த வழக்கை நாம் தொடர்ந்து நடத்தி, விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கும் வகையில் தீர்ப்பு பெற்றோம். நமக்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றோம்.

திமுக, பாஜக கூட்டணி
அப்போது அதிமுக, பாஜக கூட்டணி இருந்தும், அந்த தீர்ப்பை அமல்படுத்த காலதாமதம் ஆனது. எனவே, விவசாயிகள் கோரிக்கையின் பேரில் அதிமுகவின் 37 எம்.பி.க்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கோரி நாடாளுமன்றத்தை 22 நாட்கள் ஒத்திவைத்தோம். திமுக அப்படி செய்ததா? ஆனால், பாஜக அரசு துரோகம் செய்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

பாஜகவுடன் 1999, 2001ல் நடந்த தேர்தல்களில் கூட்டணி வைத்து, மத்திய அரசிலும் திமுக அங்கம் வகித்தது. அவர்கள் கூட்டணி வைத்தால் நல்ல கட்சி, நாம் கூட்டணி வைத்தால் மதவாதக் கட்சியா? எப்போது பார்த்தாலும் பாஜகவை விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? பாஜக, திமுக வெவ்வேறு கொள்கை கொண்ட கட்சிகள். தேர்தல் நடக்கும் வரை வேறுபாடு இருக்கலாம், தேர்தல் முடிந்த பின்னர் மக்களுக்கு நன்மை செய்வது கட்சிகளின் கடமை.

டெல்டா பாலைவனமாகிவிடும்
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மேகதாதுவில் அணை கட்டுவதாக கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் சொல்கிறார். அவரை அழைத்துவந்து தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். எவ்வளவு பெரிய துரோகம் இது? இவர்களுக்கு அதிகாரம் தான் முக்கியம். மக்கள் முக்கியமல்ல. மேகதாதுவில் அணை கட்டிவிட்டால் டெல்டா பாலைவனமாகிவிடும். நமக்கு துரோகம் செய்பவருடன் பிரசாரம் செய்யும் முதல்வருக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved