Also Watch
Read this
By: Manigandan Raja

முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் :
மேற்கு வங்காளத்தில் பாஜகவின் புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையில் ((இன்று)) உயர்மட்ட நிர்வாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்வது மற்றும் புதிய நிர்வாகத்தின் முன்னுரிமைகளை நிர்ணயிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சுவேந்து அதிகாரி தனது "X" தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நீதிமன்ற தரவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டம் :
நீதிமன்றத் தரவுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ஒரே வழக்கு, ஒரே தரவு என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒரு வழக்கு கீழமை நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றத்திற்கும், பிறகு உச்ச நீதிமன்றத்திற்கும் வரும்போது ஒவ்வொரு நிலையிலும் புதிய தரவுகள் உருவாக்கப்படுவதால் முரண்பாடுகளும், கால தாமதமும் ஏற்படுவதை களைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், ஒரு வழக்கு முதல் முறை தாக்கல் செய்யப்படும் போதே ஒரு பிரத்யேக அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த தரவு தொகுப்பே அனைத்து நிலைகளிலும் உள்ள நீதிமன்றங்களால் பயன்படுத்தப்படும். காவல்துறை, சிறைச்சாலைகள் மற்றும் நீதிமன்றங்களை ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைப்பதன் மூலம், வழக்கின் நிலை, தீர்ப்புகள் மற்றும் ஆவணங்களை ஒரு நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு சில விநாடிகளில் மாற்ற முடியும்.
அஸ்வத்தாமன் உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்க அரசு எதிர்ப்பு :

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் வியாழக் கிழமைக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், அரசு தரப்பின் பதில் மனுவுக்கு விளக்கமளிக்க அஸ்வத்தாமன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்பட 12 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குஜராத் சோமநாதர் கோயில் 75ஆம் ஆண்டு நிறைவு விழா :

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில் கட்டப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி நடந்த குடமுழுக்கு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபட்டார். விழாவை முன்னிட்டு சோமநாத் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் எங்கும் பக்தர்கள் வெள்ளமாக காட்சியளித்தது.
அப்போது தேசியக்கொடியின் மூவண்ணப் பொடிகளை கோவில் கோபுரத்தின் மீது வான்படையினர் தூவிச்சென்ற அழகிய காட்சிகளை கண்டு பிரதமர் மோடி ரசித்தார்.
உ.பி.யின் ஹாப்பூர் பகுதியில் கலப்படத் தேன் பறிமுதல் :
உத்தரபிரதேசத்தின் ஹாப்பூர் ((Hapur)) பகுதியில், சுமார் 15 ஆயிரம் கிலோ எடையுள்ள கலப்படத் தேனை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஹாப்பூரில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில், அங்கு 22 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் கிலோ எடையுள்ள கலப்படத் தேன் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்து, அதனை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ((FSSAI)) தனது 'X' தளத்தில், அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே தேனை பரிசோதனை செய்யும் படங்களை வெளியிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved