Also Watch
Read this
By: Manigandan Raja

காலியாக உள்ள உயர்சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆப் மதிப்பெண் சதவீதத்தை ஏன் குறைக்கக்கூடாது ? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இது குறித்து பரிசீலத்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது
தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த 153 உயர்சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடங்கள் நிரம்பாமல் இருந்தால் அதனை நிரப்பும் வகையில் கட்-ஆஃப் மதிப்பெண் சதவிகிதத்தை குறைத்து அந்த இடங்களை முழுவதுமாக மீண்டும் தமிழக அரசு வசம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கிய உயர் சிறப்பு மருத்துவப்படிப்புக்கான இடங்களில் 40 இடங்கள் நிரம்பாமல் உள்ளதாகவும், அதனை மீண்டும் ஒப்படைக்க உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது
ஆனால், தமிழகத்தால் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டு நிரம்பாமல் உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து, அந்த இடங்களை தமிழகம் வசமே திரும்ப ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்ததுஅப்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டி ஆஜராகி, உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்காக 'ஸ்ட்ரே சுற்று' என்ற ஒரு சுற்று கலந்தாவை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை இவ்வாண்டு குறைக்க முடியாது என்று முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறுக்கிட்டு,அகில இந்திய தொகுப்பில் 1800 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக இருப்பது சாதாரண விஷயமல்ல, இது போன்ற சிறப்பு படிப்புகளில் இவ்வாறு காலியாக இருப்பது மருத்துவ துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் கட் ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை குறைக்காமல் உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களை மீண்டும் தமிழகம் வசம் ஒப்படைப்பதால் எந்த பயனும் இல்லை, ஏனெனில் அந்த இடங்களை நிரப்ப முடியாது.
எனவே உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் சதவீதத்தை குறைத்து அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் வழங்கப்பட்டு நிரம்பாமல் இருக்கும் 40 இடங்களை தமிழக வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
இதனைதொடர்ந்து நீதிபதிகள், கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தை ஏன் குறைக்கக்கூடாது ? குறைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என கேள்வி எழுப்பியதோடு, 1800 உயர்சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் காலியாக உள்ளன இவை நிரப்பப்படாமல் வீணாகுவதை விரும்பவில்லை.
எனவே காலியாக உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான இடத்தை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆப் மதிப்பெண் சதவீதத்தை குறைப்பது குறித்து பரிசீலித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு,
வழக்கு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved