Also Watch
Read this
Posted on: Jan 30, 2026 05:15 AM
By: Manigandan Raja
அண்மை நாட்களாக அதிரடியாக அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்று சரிந்து, ஆறுதலை தந்துள்ளது. சென்னையில், ஒரு சவரனுக்கு 4,800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 29,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 600 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் 16,200 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலையும், ஒரு கிராமுக்கு 10 ரூபாய் என்ற அளவில் சற்று குறைந்து 415 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 10,000 ரூபாய் குறைந்து, நான்கு லட்சத்து 15,000 ரூபாயாக உள்ளது.
நேற்று உச்சத்தில்...
இந்திய வரலாறு கண்டிராத வகையில், நேற்று கடுமையான உச்சத்திற்குச் சென்றது ஆபரணத் தங்கத்தின் விலை. ஒரு சவரனுக்கு 9,520 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 34,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலையும், ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாய் அதிகரித்து 4 லட்சத்து 25,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில், நேற்று காலை 29ஆம் தேதி, ஆபரணத் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வகையில் மிகப் பெரிய உயர்வைச் சந்தித்தது. ஒரே நாளில், ஒரு சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து, பொது மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று ரூ.9,520 உயர்வு
சென்னையில், நேற்று காலை, ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,400க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு மொத்தமாக ரூ.14,720 உயர்ந்துள்ளது.
உச்சம் தொட்ட வெள்ளி
வெள்ளியின் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.425 ஆகவும், பார் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.25,000 உயர்ந்து, ரூ.4 லட்சத்து 25 ஆயிரமாகவும் விற்பனை ஆனது. ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வால், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க எண்ணியிருந்த பொது மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சர்வதேச பொருளாதார சூழ்நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் டிசம்பர் 15ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர், ஆபரணத் தங்கம் விலை படிப்படியாக உயர்வை கண்டது.
என்ன தான் காரணம்?
ஈரானில் உள்நாட்டு கலவரம், அந்நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்ற போர் அச்சம், சர்வதேச பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால், முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தங்கத்தின் விநியோகம் குறைந்து தேவை அதிகரித்துள்ளது. எவ்வளவு தான் காரணங்களை அடுக்கினாலும், சொக்கத் தங்கம் மீது சொக்கிக் கிடக்கும் சாமானியர்கள் ஏங்கிப்போய்த் தான் கிடக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved