Also Watch
Read this
மேட்டூர் அணையை திறக்க சாத்தியக்கூறு இல்லாததால், குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் விஜய் அறிவித்து உள்ளார். காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட உழவர்கள் பயன்பெறும் வகையில் 134 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணை திறக்க சாத்தியக்கூறு இல்லை
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
ஆண்டுதோறும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், ழதிருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி , அரியலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்வதற்கு, மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறப்பது வழக்கம். இந்நிலையில், நடப்பு தென்மேற்குப் பருவத்தில் 'எல்நினோ' எனும் நிகழ்வால் மழை அளவு 90 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது. இன்று ஜூன் 12, மேட்டூர் அணையைத் திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாத நிலை உள்ளது.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம்
இதனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் இயல்பாக நெல் சாகுபடி மேற்கொள்ளும் 5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. எனினும், டெல்டா மாவட்டங்களில் வடிமுனைக் குழாய்க் கிணறுகள் Filter Points மூலம் 3.55 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி மேற்கொள்ள இயலும் என்பதாலும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் தற்போது மழைப் பொழிவு சீராக இல்லாத நிலையிலும், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட கார், குறுவை, சொர்ணவாரிப் பருவத்தில் நெல் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகள் பயனடையும் வகையில் 2026ஆம் ஆண்டிற்கான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

மொத்தம் ரூ.134.83 கோடி ஒதுக்கீடு
இதன்படி, வடிமுனைக் குழாய்களை கொண்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக 77.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும், டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியை ஊக்குவிப்பதற்காக 57.33 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் என மொத்தம் 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில், நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பிற்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் மற்றும் புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத்தொகை ஆகிய இனங்களுக்கு 134.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

நீர் மேலாண்மை...
இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன் நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதை மற்றும் தொழில்நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும். மேலும், வேளாண் பொறியியல் துறை வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள 2,325 கி.மீ. நீளமுள்ள C மற்றும் D வாய்க்கால்கள் 10 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டுள்ளன. மேலும், நீர்வளத்துறை மூலமாக 100 கோடி ரூபாய் செலவில் 4,971 கி.மீ. நீளமுள்ள A மற்றும் B வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை 97 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.

18 மணி நேரம் தடையற்ற மின்சாரம் - முதல்வர் வேண்டுகோள்
மேலும், குறுவை சாகுபடிக்கு 10.714 மெட்ரிக் டன் நெல் விதைகள் மற்றும் 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணிநேரம் வழங்கப்படும். எனவே, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவிகளைப் பெற்றுப் பயனடையுமாறு முதலமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved