வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, உத்தரவிட்டுள்ளது. ’புலி’ படத்திற்கு பெற்ற ரூ.15 கோடி கடந்த 2015 - 2016ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக கூறி இருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு நடத்திய வருமானவரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, ’புலி’ படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.அபராதம் விதித்த வருமான வரித்துறை இந்நிலையில், ’புலி’ பட வருமானத்தை மறைத்ததற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. ஆனால், தனக்கு அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.’புலி’ வருமானம் - இறுதி விசாரணைஇந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னர், இறுதி விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவை 2019 ஜூன் 30ஆம் தேதிக்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் ஆறு ஆண்டுகள் காலதாமதமாக 2022ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. வருமான வரித்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர் சீனிவாஸ், வருமான வரி மதிப்பீட்டை எதிர்த்த அப்பீல் முடிந்த பின், ஆறு மாத கால அவகாசத்துக்கு உள்ளேயே அபராத உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து சரி தான். விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.விஜய் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி இன்று, பிப்ரவரி 6ஆம் தேதி, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வழக்கில் நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.மேல்முறையீடு - அனுமதி உடனே, மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என, விஜய் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு, அபராத உத்தரவை எதிர்த்து, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்ய அனுமதியளித்த நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவு தாமதமாக பிறப்பிக்கப்பட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மேல் முறையீடு செய்யக் கூடாது, மற்ற காரணங்களை கூறி, மேல் முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவிட்டார். Related Link எட்டாக்கனியான ஓய்வூதிய பலன்கள்?