Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 11:37 AM

உலகம் முழுவதும், எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மேற்காசியப் போரால், இந்தியாவின் வர்த்தக பாதைகளுக்கு பாதிப்பு என்றும், பெட்ரோல், டீசல், எரிவாயு, உரங்கள் விநியோகம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் மாநிலங்களவையில் பிரதமர் மோடி விளக்கம் அளித்து உள்ளார்.
இந்தியர்கள் குறித்து கவலை
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது;
வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பில் மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளின் சரக்கு கப்பல்களில் இந்தியர்கள் பெரும்பான்மையாக பணியாற்றி வருகின்றனர். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் ஒரு கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது இந்தியாவின் முதன்மையான கவலை. ஹோர்முஸ் நீரிணையில் பல கப்பல்கள் சிக்கியிருப்பதும் அதில் உள்ள இந்திய பணியாளர்கள் குறித்தும் கவலை ஏற்பட்டு உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை கடந்து, கப்பல்கள் வருவது சவாலாக இருந்தாலும், பேச்சு வார்த்தை, தூதரக உறவு மூலம் வழி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
வெளிநாட்டுக் கப்பல்களை நம்பியிருக்கும் நிலை
இந்தியாவின் வர்த்தகத்தில் 90 சதவீதம் வெளிநாட்டுக் கப்பல்கள் மூலமே நடைபெறுவது பிரச்சனையின் தீவிரத்தை அதிகமாக்குகிறது. 70 ஆயிரம் கோடி ரூபாயில் வர்த்தக கப்பல்கள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலை மிகுந்த கவலை தருகிறது. 3 வாரங்களுக்கும் மேலாக பிரச்சினை நீடிக்கிறது. இதனால் சர்வதேச பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய போரால் நமது நாட்டில் பல்வேறு சவால்கள் எழுந்து உள்ளன.
சீரான விநியோகம்
தற்போதைய இக்கட்டான காலத்திலும் பெட்ரோல், டீசல், காஸ் விநியோகம் சீராக நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சமையல் காஸ் தேவையில் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் சமையல் காஸ் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் காஸ், உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி ஆகியவை முன்பு 27 நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது 41 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. இதனை 65 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து விவாதிக்க, நாளை மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. உலகளாவிய மற்றும் பிராந்திய அளவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்காப்பு தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, டிஆர்டிஓ அமைப்பின் தலைவர் சமீர் காமத் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved