Also Watch
Read this
எட்டு மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயர் பதவியை கூட திமுகவால் ஜெயிக்க முடியாது என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்துள்ளார்.
தவெக எம்எல்ஏக்களுக்கு...
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தவெக பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. இதில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;
திமுக தன்னுடைய தோல்வியை என்றைக்கும் நினைக்க மாட்டார்கள். மீண்டும் மீண்டும் நம்மை குறைவாக நினைப்பார்கள். கிண்டல், கேலி செய்வார்கள். இப்போது கூட உள்ளாட்சித்துறையில் ஜெயித்த திமுக மேயர், நகராட்சி தலைவர்கள், நம்முடைய தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை.

108 தொகுதிகளில் வென்றோம்
குடிநீர் தராமல், குப்பைகளை அள்ளாமல் வேண்டுமென்றே இந்த தவெக அரசுக்கு கெட்டபெயர் கிடைக்க வேண்டும் என செயல்படுகிறார்கள். திமுகவின் கெட்ட சிந்தனை என்னவென்றால் முதலமைச்சர் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். மின்சார தடை இருப்பதாக சொல்கிறார். இவற்றையெல்லாம் செய்வது திமுகவில் இருக்கும் மேயர்கள் தான். அதோட வெளிப்பாடு தான் 108 தொகுதிகளில் நாம் ஜெயித்தோம்.

எட்டு மாத கர்ப்பிணி
இதில் ஒரு வெற்றி என்னை கண்கலங்க வைத்தது. அது திருவிக நகரில் ஜெயித்த பல்லவி தான். வேட்பாளராக தேர்வு செய்யும்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தெருத் தெருவாக நடந்து வாக்கு கேட்டு செல்வாரா? என கேட்டேன். அதற்கு பல்லவி, 8 மாத கர்ப்பிணியாக இல்ல, வாய்ப்பு கொடுத்தால் குழந்தை பிறந்தாலும் சென்று வாக்கு கேட்பேன். என் குழந்தை பிறக்கும்போது நீங்கள் தான் முதலமைச்சராக இருப்பீர்கள்? என பல்லவி உறுதியாக சொன்னார்.

டெபாசிட் வாங்குவீர்களா?
ஒரு நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தவெக எம்.எல்.ஏ., பல்லவியை அவமரியாதை செய்தார். மேயர் என்ற அகங்காரத்தை பிரியாவுக்கு கொடுத்தது திமுக தான். இன்னொரு ஆளுங்கட்சி என்ற திமிரை உடைக்க மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக மீண்டும் மீண்டும் வேலை செய்வோம். உதயநிதிக்கு ஒரு சவால் விடுக்கிறேன். இன்னும் 8 மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கப்போகிறது. தைரியம், தில்லு இருந்தால் 25 மேயரில் ஒரு மேயரை ஜெயித்து காட்டுங்கள் பார்க்கலாம். இதே சென்னையில் நீங்கள் டெபாசிட் வாங்குவீர்களா? என பார்க்கலாம்.

தேர்தல் வேலை
எம்எல்ஏ பல்லவி எங்கு அவமானப்படுத்தப் பட்டார்களோ அப்போதே நாங்கள் தேர்தல் வேலையை தொடங்கி விட்டோம். ஒரு மேயர் பதவியை வென்று காட்டுங்கள். அப்போது திமுக என்றால் அசைக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம். திமுக எந்த காலத்திலும் பெண்களை மதிக்காது என்பதற்கு மேயர் பிரியாவே சாட்சி. ஒரு பெண் இன்னொரு பெண்ணை மதிக்காமல் இருப்பது திமுகவுடைய வளர்ப்பு. மு.க.ஸ்டாலின் தோல்வி, உதயநிதியின் கேவலமான சிந்தனையாகும். மு.க.ஸ்டாலின் தான் கருணாநிதி குடும்பத்தின் கடைசி முதலமைச்சர். திமுக தங்களது உட்கட்டமைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved