Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 12:04 PM
திமுக அரசைக் கண்டித்து, அதிமுக தலைமையிலான NDA கூட்டணி சார்பில், வருவாய் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சட்டம் - ஒழுங்கு சவக்குழிக்கு சென்று விட்டதாகவும், பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் புழக்கத்தால் சீரழிவதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.
வேதனையோடு சொல்வதென்றால்...
இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை;
2021ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் தெருக்களில் கஞ்சா புழக்கம் இல்லாத இடமே இல்லை என்கிற நிலையை அரசு உருவாக்கி இருக்கிறது. வேதனையோடு சொல்வது என்றால், கல்லூரி மாணவர்களும், மாணவிகளும், பள்ளிக்கூட மாணவ மாணவிகள் கூட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மிகச் சாதாரணமாக பயன்படுத்துகிற செய்திகளும், காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகிறது. சட்டம் - ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல் துறையை கையில் வைத்திருக்கின்ற தமிழ்நாட்டின் முதலமைச்சர், கள்ள மவுனம் சாதித்ததோடு இல்லாமல் விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தார்.
கொடூரமான சம்பவங்கள்
போதை கும்பல், கூலிப் படைகள் ஏற்படுத்திய சட்டம் - ஒழுங்கு பிரச்சனைகளின் உச்சமாக, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான, வரலாற்றில் முன் எப்போதும் பார்த்திடாத அளவிற்கு மிகக் கொடூரமான பாலியல் கொடுமைகளும், கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில், சுமார் 30 லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து உள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 4 பட்டியலின இளைஞர்கள் லாக்கப்பில் மரணமடைந்து உள்ளனர். இதிலிருந்து, தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு எதை நோக்கிச் செல்கிறது என்பதையும், வேலியே பயிரை மேய்கிறது என்பதையும் மக்கள் தெளிவாக உணர்ந்து, மிகுந்த வேதனைப்படுகின்றனர்.
பொது மக்களுக்கு சந்தேகம்
தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள். தமிழ்நாடு ரவுடிகளினுடைய புகலிடமாக, கூலிப் படைகளின் ராஜ்ஜியம் நடக்கின்ற இடமாக மாற்றப்பட்டு இருக்கிறது. திமுக அரசு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, ஏன்? என்கிற கேள்வியை மக்கள் கேட்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, போதைப் பொருள் விற்பனை, கள்ளச் சாராய விற்பனை, மணல் கொள்ளையில் திமுகவினரே சிக்குவதும், இயற்கை வள கொள்ளை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதலில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரே ஈடுபட்டிருப்பதும், ஏழை, எளிய மக்களை ஏமாற்றி கிட்னி திருடிய வழக்கில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனையையே குற்றம் சாட்டப்பட்டிருப்பதும், பல்வேறு பாலியல் வன்கொடுமைகளில் ஆளுங்கட்சி பிரமுகர்களே முதன்மைக் குற்றவாளிகளாக ஈடுபட்டிருப்பதும், இந்த குற்றங்களுக்கு எல்லாம் ஆளுங்கட்சியும், முதலமைச்சரும் அரணாக நின்று பாதுகாப்பு கொடுக்கிறார்களோ? என்கிற பெரும் சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
அறைகூவல் விடுக்கிறேன்
நிர்வாகத் திறமையற்ற, மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு மக்கள் பெரும் கோபம் கொண்டிருக்கின்றனர். திமுக ஆட்சியில் மேற்கண்ட மக்கள் விரோதச் செயல்களின் வெளிப்பாடுதான், ஆளும் கட்சிக்காரர்களை மக்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும், வெளியேறச் சொல்லி முழக்கமிட்டும் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
எனவே, இந்த கொடூர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கவும், மக்கள் விரோத ஆட்சியாளர்களின் முகத் திரைகளை கிழிக்கும் வண்ணமும், தமிழ் நாடு முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெருந்திரளாக மக்களைத் திரட்டி, நாளை மார்ச் 17ஆம் தேதி, ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பேராதரவினைத் தர வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இந்த மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிவதற்கு கழகச் சொந்தங்கள் திரண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுக்கிறேன்.
இவ்வாறு இபிஎஸ் தெரிவித்து உள்ளார். இந்நிலையில், விருகம்பாக்கம் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பங்கேற்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved