Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 07:45 AM
நடிகையை குறிப்பிட்டு, பெண்களை இழிவாக பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு, பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்து உள்ளார். தங்களது வீட்டில் இருக்கும் பெண்களை நினைத்து பார்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இன்று பிறந்த நாள்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இன்று மார்ச் 18ஆம் தேதி தமது பிறந்த நாளைக் கொண்டாடினார். தனது மகன்கள், தொண்டர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது;
முதல் ஆளாக தொலைபேசியில், அண்ணன் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு தேமுதிக சார்பாக என்னுடைய நன்றியை தற்போது தெரிவித்துக் கொள்கிறேன். வெகு விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சம்பந்தமாக பேசுவோம் என்றும் கூறியுள்ளார். சீக்கிரமாகவே பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு களத்துக்கு செல்வோம், நேரம் குறைவாக இருக்கிறது என, நான் கூறினேன்.
ஆர்ப்பாட்டத்தில் இப்படி பேசலாமா?
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என சொல்லி ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். நான் ஒரு பெண். எனவே, நிச்சயமாக யாராக இருந்தாலும், எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் ஒரு பெண்ணை தரக்குறைவாக பேசினால் கண்டிக்க உரியவர்கள். அதனால் அந்த வார்த்தைகளை, அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அது நடிகையாக இருந்தாலும் சரி, எந்த பெண்ணாக இருந்தாலும் சரி.
ஆர்ப்பாட்டம், எச்சரிக்கை
இல்லையென்றால் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த பெண் சக்திகளை ஒன்றாக திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம், கண்டனத்தை நான் முன்னெடுப்பேன். இதில் எந்த விதமான மாற்றுக் கருத்தும் இல்லை. பெண்களை மதிக்கும் ஒரு நாட்டில் இதுபோன்று இழிவுபடுத்தி பேசி, கைதட்டி சிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
யாராக இருந்தாலும் இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். என்னுடைய பிறந்தநாள் செய்தியாக இதை கூறுகிறேன்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved