Also Watch
Read this
Posted on: Jan 20, 2026 06:36 AM
By: Manigandan Raja
அரசின் கொள்கை அறிக்கையை படிக்கும் நடைமுறை தொடர்ந்து ஆளுநரால் மீறப்படுவதை ஏற்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்துவதற்கான முயற்சியை நாடாளுமன்றத்தில் திமுக முன்னெடுக்கும் என்றும் உறுதி தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு
தமிழக சட்டசபை கூடியதும், தேசிய கீதம் பாடாததால், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். அப்போது, ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழக அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:
மீண்டும் ஒரு முறை சட்டவிதிகளையும், மரபுகளையும் மீறி செயல்பட்டு அவையில் இருந்து, ஆளுநர் வெளியே சென்று இருக்கிறார். வெளியே என்று சொல்வதை விட வெளியேறி சென்று இருக்கிறார். இந்த செயல் அவரது பதவிக்கு அழகல்ல. இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 176ன்படி ஆளுநர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்படும் அறிக்கையை முழுமையாக படிக்க வேண்டிய ஒன்றாகும். இதில், ஆளுநர் தனது சொந்த கருத்துக்களை தெரிவிப்பதற்கோ, மாநில அரசால் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்ட உரையில் நீக்கம் செய்யப்படுவதற்கோ அரசியலமைப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை. இருப்பினும் ஆளுநர் விளக்கம் கேட்டு அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலும் அளிக்கப்பட்டு இருக்கிறது.
மரபை அவமதிக்கும் செயல்
இந்நிலையில், ஆளுநர் வேண்டுமென்றே அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலை செய்துள்ளார். ஆளுநரின் செயல் என்று 100 ஆண்டு கால மரபையும், நீண்ட பாரம்பரியத்தையும் கொண்ட மக்கள் சபையையும் அவமதிக்கும் செயலாக கருதுகிறேன். ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே நடந்து கொண்டது போலவே, மீண்டும் செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. ஆளுநர் என்பவர் மாநில நலனின் அக்கறை கொண்டவராக, மக்கள் மேம்பாட்டில் ஆர்வம் கொண்டவராக, உண்மையை பேசுபவராக இருக்க வேண்டும். அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராக இருக்க வேண்டும். ஆளுநர், இதற்கு மாறாக செயல்படுகிறார்.
பொது மேடைகளில் அரசியல்
மாநில நிர்வாகத்தை முடக்கவும், பொது மேடைகளில் அரசியல் பேசியும், அவதூறு பரப்பி வருகிறார். இது, அவரது சொந்த விருப்பம் என்று கருதலாம். அந்த முயற்சியை இங்கும் செய்ய நினைப்பது ஏற்புடையது அல்ல. அவையின் புகழ் மங்கிடாத வகையில் பாதுகாத்து வந்த சான்றோர்களின் வழித்தடத்தை பின்பற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாதுகாக்க வேண்டிய முதல் பொறுப்பு எனக்கு உள்ளது.
இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
இதனை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம்:
ஏற்கனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி, தமிழக அரசால் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்ட உரையை சட்டசபையில் படிக்காமல் சென்றதை அவை ஏற்கவில்லை.
உரையை ஆளுநர் படித்ததாக இப்பேரவை கருதுகிறது. ஆளுநர் உரை மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும். வெளிநடப்பு இடம்பெறக்கூடாது.
நாடு முழுவதும் மாநிலங்களின் சட்டசபைகளில் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை வாசிப்பு என்ற நடைமுறை இருந்து வருகிறது. இந்த நடைமுறையை விலக்க பார்லிமென்டில் வலியுறுத்துவோம். இதற்காக அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார்.
முதல்வரின் தீர்மானம் நிறைவேற்றம்
ஆளுநர் உரையை அவர் படித்ததாகவே கருதப்படும் என முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதற்கு, சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இதையும் பாருங்கள் - ஆளுநர் மாளிகை விளக்க அறிக்கை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved