Also Watch
Read this
By: Web Team

உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஆளுநர் இல.கணேசன் காலமானார்.
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் குடும்பம் சென்னையில் உள்ளது. அவர் சென்னை வந்திருந்த நிலையில், கழிவறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இல.கணேசன் வாழ்க்கை குறிப்பு:
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (iLa.Ganeshan) தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர் 1945ம் ஆண்டு பிப்ரவரி 16ம் நாள் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் பிரச்சாரகராக இருந்தவர்.
சிறு வயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர பணியாளராக இருந்து வந்தார்.
பின்னர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலராகவும், கட்சியின் தேசிய துணை தலைவராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு மாநில பாஜக தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர், 1991ல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆகஸ்டு 22, 2021 அன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இவரை 17வது மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்தார்.
பிப்ரவரி 20, 2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால், 19வது நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஆளுநர் இல.கணேசன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved