Also Watch
Read this
Posted on: Jan 20, 2026 05:08 AM
By: Manigandan Raja
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் புறக்கணித்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். தேசிய கீதம் பாடுமாறு பலமுறை கூறியும் ஏற்காதது ஏன்? எனக்கேட்டு, வந்த சில நிமிடங்களிலேயே வெளிநடப்பு செய்தார்.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர்
பரபரப்பான சூழலில், புத்தாண்டில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று ஜனவரி 20ஆம் தேதி, காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. சட்டப்பேரவை கூடியதும் தேசிய கீதம் பாடாததால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் புறப்பட்டு சென்றார். இதற்கு, ஆளும் திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், ஆளுநர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையில், அரசின் கொள்கைகள், அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிய அறிவிப்புகள் போன்றவை இடம் பெறும். ஆளுநர் பேச வேண்டிய உரையை, தமிழக அரசு தயாரித்து, அனுப்பி வைக்கும். அதை, சட்டசபையில் ஆங்கிலத்தில் ஆளுநர் வாசிப்பார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைய சபை நடவடிக்கை நிறைவு பெறும். மறுநாளில் இருந்து, ஆளுநர் உரை மீது விவாதம் நடத்தப்பட்டு, உரைக்கு ஒப்புதல் அளிக்கப்படும், இதுவே மரபாகும்.
ஆளுநரை வரவேற்ற சபாநாயகர்
இந்நிலையில், இன்று சட்டசபை வளாகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு வரவேற்றார். அவருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பேண்ட் வாத்தியம் இசைத்து அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்தாண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்தாண்டு என்ன நடந்தது?
கடந்த 2024ஆம் ஆண்டு, தமிழக அரசு தயாரித்து வழங்கிய உரையில் இடம் பெற்றிருந்த, 'சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம், பெண்ணுரிமை, அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை, ஆளுநர் வாசிக்காமல் தவிர்த்து விட்டார். இது, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசு தயாரித்த உரை மட்டுமே, சபை குறிப்பில் இடம் பெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை முன் மொழிந்தார். இதையடுத்து, சபை நிகழ்வு முடிவதற்கு முன்னரே, சபையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.
தேசியகீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும்...
கடந்த ஆண்டு, உரை நிகழ்த்த சட்டசபைக்கு வந்த ஆளுநர், தன் உரைக்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், சட்டசபை மரபுப்படி முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்து, சபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். இதையடுத்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்த நிலையில், நடப்பாண்டும், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டசபையில் இருந்து, வெளிநடப்பு செய்து, புறப்பட்டு சென்றுவிட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved