Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 06:45 AM
By: Manigandan Raja
பாராமதியில் தரையிறங்கும் நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்க முற்பட்ட போது, வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது.
ஒன்பது முறை வென்றவர்
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், ஒன்பது முறை போட்டியிட்டு வென்ற பாராமதி தொகுதியிலேயே, இன்று விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 முறை பாராமதி தொகுதியில் போட்டியிட்ட அஜித் பவார், தொடர் வெற்றிகளை குவித்தவர்.
சிறிய ரக விமானத்தில் பயணம்
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து பாராமதி விமான நிலையத்துக்கு தனி விமானம் மூலம், இன்று 28ஆம் தேதி காலை சென்ற அஜித் பவார், விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும்போது நிலை தடுமாறிய விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில், விமானத்தில் பயணித்த அஜித் பவார், அவரது பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் மற்றும் 2 விமானிகள் உயிரிழந்தனர்.
34 ஆண்டுகள் - ஒரே தொகுதி
மகாராஷ்டிர துணை முதல்வரான அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவாரின் அண்ணன் மகன். தேசிய வாத காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக, சரத்பவாரை விட்டு தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்ற அஜித் பவார், நீதிமன்றத்தை நாடி தேசியவாத காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றினார். மகாராஷ்டிர மாநிலத்தின் முக்கிய தலைவராகவுள்ள அஜித் பவார், 2010 முதல் 2014 வரையிலும், 2019 முதல் தற்போது வரையிலும் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
தொடர் வெற்றி பெற்ற அஜித்பவார்
மாநில அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அஜித் பவார், முதல்முறையாக பாராமதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு 1991ஆம் ஆண்டு வெற்றிபெற்றார். அதே ஆண்டு, மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாராமதி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொடர்ந்து 1995, 1999, 2004, 2009, 2014, 2019, 2024 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். 1991, 1995 தேர்தல்களில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.
பிரச்சாரத்திற்கு சென்றவர் உயிரிழப்பு
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு பிரசாரத்துக்காக சென்றபோது, விபத்தில் சிக்கி, உயிரிழந்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved