Also Watch
Read this
Posted on: Mar 13, 2026 06:35 AM
ஜல் ஜீவன் குடிநீர் திட்டத்திற்கான 3 ஆயிரத்து 112 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 3ஆம் கட்டத்திற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்புதலையும் நிதியையும் விடுவிக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கூட்டுக் குடிநீர் திட்டங்கள்
இதுதொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராம திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தியது. அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை உள்ளடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
நிதி ஒதுக்கவில்லை
மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறை முன்னேற்றத்தில் உள்ளன. ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு என 5,914 கோடி ரூபாய் மட்டுமே விடுவிக்கப்பட்டது. 3,112 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. 2024–25ஆம் ஆண்டுக்காக, தமிழ்நாட்டிற்கு 2,434 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டு உள்ளது. 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.
உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும்
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்து உள்ளது. நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக, நிலுவைத் தொகையான 3,112 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி பிரதமர் தலையிட வேண்டும்.
ஆதரவை பின் வாங்குவது, பாதிக்கும்
ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் கட்டம்-3 கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டது. இதில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசின் உதவியை தற்போது, வழங்க இயலாது எனக் குறிப்பிட்டு உள்ளது. முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் ஒன்றிய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும்.
தொடர்ந்து நிதி ஆதரவு தேவை
ஒன்றிய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு கட்டம்-3 ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டும். அப்போது தான் தமிழ்நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, ஒன்றிய அரசு தனது ஆதரவை தொடர்ந்து அளிக்கும் என நம்பிக்கை உடன், பிரதமர் ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்த்துள்ளோம்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved