Also Watch
Read this
By: Web Team

சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் சமீரன், துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த பின்பு நடைபெறும் முதல் கூட்டம் என்பதால் பலத்த எதிர்பார்ப்புடன் கூட்டம் தொடங்கியது. மேலும் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் ரிப்பன் மாளிகை வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, திமுக கொண்டுவந்த திட்டங்களைதான் தற்போதைய அரசு நிறைவேற்றி வருகிறது என்றும், அந்த திட்டங்களின் பெயர்களை மாற்றியாவது செயல்படுத்தினால் மட்டுமே தவெக அரசால் இயங்க முடியும் எனவும் கூறினார். மேலும் தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருப்பதாக, மின்வெட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி பேசினார்.

இதனையடுத்து நேரமில்லா நேரத்தில் பேசிய அதிமுக கவுன்சிலர் சதீஷ், தனது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் லாரிகளில் 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டால் 7 ஆயிரம் லிட்டர் மட்டும் கொடுத்துவிட்டு மீதியுள்ள 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை எங்கு கொண்டு செல்கின்றனர் என தெரியவில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து பேசிய சதீஷ், சும்மா கத்திக்கிட்டு இருக்காதிங்க நான் பொதுமக்களுக்காக மட்டும் தான் பேசுகிறேன், உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என கூறினார். அப்போது மேயர் பிரியா தேவையில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது என கூற, திமுக கவுன்சிலர்கள் அனைவரும் சதீஷூக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீரென ஆக்ரோஷமான சதீஷ், திமுக கவுன்சிலர்களை அடிப்பது போல முன்னோக்கி செல்ல, திமுகவினரும் ஆவேசமாகி அவரை நோக்கி சென்றனர். அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் தாம் வைத்திருந்த பேப்பரை சதீஷ் மீது வீறி எறிந்ததால் களேபரம் ஆனது.
கவுன்சிலர்கள் அனைவரும் உட்காருமாறு மேயர் பிரியா எவ்வளவோ கூறியும், ஒருவரை ஒருவர் அடிப்பது போல பாய்ந்தனர். கூட்டத்தில் அனைவரும் அமரவில்லை எனில் தாம் வெளியே சென்று விடுவதாக மேயர் எச்சரித்ததும் திமுகவினர் அமர்ந்தனர். தொடர்ந்து பேசிய சதீஷ்க்கு மீண்டும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் வெளிநடப்பு செய்தார்.

இறுதியாக காங்கிரஸ் குழு தலைவர் திரவியம் பேச ஆரம்பித்தபோது மீண்டும் கூச்சல் குழப்பம் உருவானது. "இது உழைக்கும் கை" என்று குறிப்பிட்டும், தற்போதைய ஆட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய பங்கு வழங்கிய முதலமைச்சர் விஜய் குறித்தும் பெருமிதத்துடன் திரவியம் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் காங்கிரஸ் கட்சியினரை "நம்பிக்கை துரோகிகள்" என விமர்சித்து முழக்கமிட்டனர். இதனால் மாமன்ற கூட்டத்தில் மேலும் பதற்றம் தொற்றியது. 
திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து இடையூறு செய்ததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் மேயர் மற்றும் துணை மேயரிடம் முறையிட்டனர். அப்போது திமுகவினரும் காங்கிரஸ் கவுன்சிலர்களை சுற்றி வளைத்து அரங்கமே அதிரும் அளவுக்கு கத்தியதால் கலவர பூமி போல் காட்சியளித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.