Also Watch
Read this
சேலம் மாவட்டத்தில், தமது ஆதரவாளர் அருளுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ், பிரச்சார மேடையிலேயே மயங்கி விழுந்தது, பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை மயங்கிய செய்தியை கேட்டதும், விருத்தாசலத்தில் பிரச்சார மேடையிலேயே டென்ஷனான அன்புமணி, அவர்களை சும்மா விட மாட்டேன், என்று ஆவேசமடைந்த நிலையில், ராமதாசுக்கு என்ன ஆனது? அன்புமணி எச்சரித்தது யாரை?

அனல் பறக்கும் தேர்தல் களம்
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே எஞ்சி உள்ள நிலையில், தேசிய தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை அனைவரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தமது ஆதரவாளர் அருளுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பள்ளப்பட்டி பகுதியில் பரப்புரையை முடித்துக் கொண்டு கிளம்பிய போது திடீரென அவர் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

மயங்கி விழுந்த ராமதாஸ்
மேடையில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, மயங்கி விழுந்த ராமதாசை அவரது ஆதரவாளர்கள் தாங்கி பிடித்ததோடு, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்ததில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு குறைந்ததுடன் உடல் சோர்வு காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். அதோடு, தற்போது ராமதாஸ் நலமுடன் இருப்பதாகவும் கூறினர். எனினும், பிரச்சார மேடையில் ராமதாஸ் மயங்கி விழுந்த தகவல், காட்டுத் தீ போல் வேகமாக பரவிய நிலையில், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி காதுகளுக்கும் அது எட்டியது.

விருத்தாசலத்தில் அன்புமணி
விருத்தாசலத்தில் பரப்புரை மேற்கொண்டிருந்த போது ராமதாசின் உடல்நிலை குறித்து கட்சியினர் கூறியதை கேட்டு பதற்றமடைந்த அன்புமணி, ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா, அவர்களை சும்மா விட மாட்டேன், என மேடையிலேயே ஆவேசமடைந்தார்.

தற்போது தந்தை - மகன் இடையே பனிப்போர் நிலவி வரும் நிலையில், கட்சியே இரண்டு துண்டாகி கிடக்கிறது. மகனுடன் மனஸ்தாபம் ஏற்பட்டதில் இருந்தே பாமக எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணியும், அருளும் தான் ராமதாஸ் உடன் நெருக்கம் காட்டி வருகிறார்கள் என்ற நிலையில், தற்போது அன்புமணி எச்சரித்தது இந்த 2 பேரை தான் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தொலைத்து விடுவேன்
கடந்தாண்டு இறுதியிலும், ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட போது, இவர்கள் இருவர் தான் மாறி மாறி அவரை கவனித்துக் கொண்ட நிலையில், அப்போதும் இதே போல் டென்ஷனான அன்புமணி, ஐயாவுக்கு மட்டும் ஏதாவது ஆனால், தொலைத்து விடுவேன் என கோபக் கடலில் பொங்கியதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

அன்புமணி கொந்தளிப்பு ஏன்?
88 வயதை நெருங்கி விட்ட ராமதாஸ், வயது மூப்பு காரணமாக நிர்வாக ரீதியாக முடிவெடுக்க முடியாததால், அதனை பயன்படுத்தி சுற்றி இருக்கும் சிலர் அவரை தவறான திசையில் வழி நடத்துவதாக அன்புமணி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அதற்கேற்ப செய்தியாளர் சந்திப்பில் அருள், ஜி.கே.மணி எழுதிக் கொடுத்ததை ராமதாஸ் பார்த்து படித்த சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. இந்நிலையில் தான், பிரச்சாரம் என்ற பெயரில் ராமதாசை விழுப்புரத்தில் இருந்து சேலம் வரை அழைத்து சென்று, அவரது உடல்நிலையை மோசமடைய செய்ததாக, அவர்கள் இருவரையும் குறிப்பிட்டு அன்புமணி கொந்தளித்திருப்பதாக விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved