Also Watch
Read this
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வசீகரிக்கும் குரலால், இந்தியத் திரையுலகை ஆட்சி செய்த ஆஷா போஸ்லேவின் மறைவுக்கு திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளது.

இசைக் குடும்ப வாரிசு
இசைக் குடும்பத்தைச் சேர்ந்த ஆஷா போஸ்லே 1933ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தார். பிரபல திரைப்பட பின்னணி பாடகியான மறைந்த லதா மங்கேஷ்கரின் உடன் பிறந்த சகோதரியான இவர், தமது 10 வயதிலிருந்து பாடத் தொடங்கி, இறுதிக் காலம் வரை பாடியுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 11 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி, திரைத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் ஆஷா போஸ்லே.

சவால்கள் நிறைந்த வாழ்க்கை
ஆஷா போஸ்லேவின் ஆரம்பகால வாழ்க்கை சவால்கள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். லதா மங்கேஷ்கர் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் உள்ளிட்ட முன்னணி பாடகிகள் மறுக்கும் பாடல்களே ஆஷாவுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக, துள்ளல் இசை மற்றும் கேபரே வகை பாடல்களுக்கே அவர் பொருத்தமானவர் என்று கருதப்பட்டார்.

ஆனால், தமது தனித்துவமான குரல் வளத்தால் அந்த முத்திரையை உடைத்து, பின்னர் அனைத்து வகை பாடல்களிலும் ஜொலித்தார். இதற்கு புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் ஓ.பி.நய்யார் (Omkar Prasad Nayyar) மற்றும் ஆர்.டி.பர்மன் (R.D.Burman))ஆகியோரின் பங்கு முக்கியமானது.

இருவரும் லதா மங்கேஷ்கரின் குரலைப் பயன்படுத்தாமல், ஆஷாவின் குரலை மட்டுமே வைத்துப் பல வெற்றிப் பாடல்களைத் தந்தனர். ஆஷாவின் கணவரான ஆர்.டி.பர்மன், அவரது குரலில் இருந்த 'வெஸ்டர்ன்' ஸ்டைலை உலகிற்கு அடையாளம் காட்டினார். 'டும் மாரோ டும்' (Dum Maro Dum) போன்ற பாடல்கள் இன்றும் இளைஞர்களின் விருப்பமாக உள்ளது.

செண்பகமே செண்பகமே...
தமிழ் திரையுலகில், இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ள ஆஷா போஸ்லே, தமிழ் ரசிகர்களையும் தமது குரலால் கட்டி போட்டவர் என்றால் மிகையல்ல.
* மீரா திரைப்படத்திற்காக, இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் காதல் ரசம் சொட்ட சொட்ட இவர் பாடிய "ஓ பட்டர்பிளை பட்டர்பிளை... ஏன் சிறகை விரித்தாய்.. என்ற பாடல் 2 K கிட்ஸ்களுக்கும் பேவரைட் ஒன்.

* தேனிசை தென்றல் தேவாவின் இசையிலும் இவரது குரல் தேனாய் இனித்தது.
* ஹேராம் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ஆஷா போஸ்லே பாடிய, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி... என்ற பாடல் அவர் மறைந்தாலும் நம் காதுகளை விட்டு மறையவில்லை எனலாம்.

* அலைபாயுதே, சந்திரமுகி திரைப்படங்களில் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் துள்ளல் பாடல்களையும், ரொமாண்டிக் பாடல்களையும் தந்துள்ளார் ஆஷா போஸ்லே.

விருதுகள், கவுரவம்...
மெல்லிசை, கஜல், பாப், ஹிப்-ஹாப் என்று, ஆஷா போஸ்லே தொடாத இசை வடிவங்களே இல்லை. அனைத்து வகையான பாடல்களுக்கும் கச்சிதமாக பொருந்தக் கூடிய குரலுக்கு சொந்தக்காரரான ஆஷா போஸ்லேவுக்கு 2 தேசிய விருதுகள் மற்றும் தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட உயரிய விருதுகளை வழங்கி இந்திய அரசு கௌரவித்துள்ளது.

கின்னஸ் சாதனை
இசை வரலாற்றில், அதிக பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்த ஆஷா போஸ்லே, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார்.

மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதி நிகழ்வுகள் மும்பை சிவாஜி பார்க் பகுதியில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு பாடகியாக மட்டுமல்லாமல், தடைகளை தகர்த்து தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய ஒரு சாதனை பெண்ணாக திகழ்ந்த ஆஷா போஸ்லேவின் சகாப்தம் முடிவுக்கு வந்திருப்பது கோடிக்கணக்கான அவரது இசை ரசிகர்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved