Also Watch
Read this
சர்க்காரியா கமிஷன் அறிக்கை முதல் அமலாக்கத்துறை அறிக்கை வரை கடந்த 70 ஆண்டுகளில் திமுக மீது முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டப்பேரவையில் பட்டியலிட்ட முதலமைச்சர் விஜய், அரை நூற்றாண்டுக்கும் கீழ் இறங்கி போய் அனைத்து முறைகேடுகளையும் தூர்வாரி கொண்டு வந்து திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்தார். "திமுக இருக்கும் இடத்தில் தான் தப்பே நடக்கும், தப்பு நடக்குற இடத்தில் தான் திமுகவே இருக்கும்," என்ற முதலமைச்சரின் அதிரடியால், அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் கூடிய தமிழக சட்டப்பேரவையில், காவல்துறையின் மானியகோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
தனது டேபிளில் இருப்பதாக சொன்ன 3 பைல்களை ஓப்பன் பண்ணுவதற்கு முன்பு சின்ன சாம்பிள் பார்க்கலாமா? என்ற முதலமைச்சர், அமலாக்கத்துறை அனுப்பிய அறிக்கையில் சொல்லப்பட்ட சிலவற்றை மட்டும் படிப்பதாக கூறி பட்டியலை அடுக்க தொடங்கினார்.

சர்க்காரியா கமிஷன் அறிக்கையில்...
1970ல் திமுக ஆட்சியில் சத்தியநாராயண பிரதர்ஸ் நிறுவனத்துக்கு வீராணம் திட்டத்திற்கான குழாய்கள் தயாரிப்பதற்கான டெண்டர் வழங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் 80 பக்கத்துக்கு தனி சாப்டரே இருப்பதாக கூறிய முதலமைச்சர், அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்துவிட்டது என்றார்.
கலைஞர் மீது தனக்கு பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என்ற முதல்வர், அதே கலைஞர் தான் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது என்றார்.

மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக் கொள்பவர்கள்...
அரசியல் பாரம்பரியம் பற்றி வீரவசனம் பேசுவோரின் அருமை பெருமைகளை மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டாமா? என்ற முதல்வர், மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக் கொள்பவர்கள் அப்பவே அப்படி என்றால் இப்போது யோசித்து கொள்ளுங்கள் என்றார்.

10 சதவீதம் வரை பார்ட்டி பண்ட் வசூல்
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 முதல் 10 சதவீதம் வரை பார்ட்டி பண்ட் என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சராக இருந்த உதயநிதி உள்ளிட்டோர் நேரடியாக பலனடைந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது என்றார்.

கடவுளுக்கு தான் வெளிச்சம்
திமுக குடும்பத்திற்கு நெருக்கமான ரத்தீஷ்னு ஒருத்தர் பவர் புரோக்கராக செயல்பட்டதாக ED சொல்லியிருக்கிறது என்ற முதலமைச்சர் விஜய், யார் இந்த ரத்தீஷ்?, யாருடைய வழிகாட்டுதலில் எல்லாவற்றையும் செய்தார்?, தவெக அரசு வந்ததும் ஏன் துபாயில் சென்று ஒளிந்து கொண்டார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, கடவுளுக்கு தான் வெளிச்சம் என்றார்.

விஞ்ஞான ஊழல் என்பது இது தான்
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் டாஸ்மாக் போக்குவரத்து டெண்டரில் தலையிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர், திமுக எப்போ எதை செய்தாலும் குடும்பமாக தான் செய்வார்கள் போல என்றார்.

இரண்டு துறைகளின் பைலை ஓபன் பண்ணியதற்கே இப்படி நாறுவதாக சைகை செய்த முதலமைச்சர் மற்ற துறைகளை தோண்டினால் எத்தனை பூதம் கிளம்புமோ என்றதோடு, ஆதாரம் வேண்டும் ஆதாரம் வேண்டும் என கேட்டீர்களே இது போதுமா? என்றார்.

அன்புடன் தெரிவிக்கிறேன்
ஊழல் என்று சொன்னால் உடனடியாக எழுந்து ஆதாரம் கேட்பவர்கள் ஒரு போதும் நாங்கள் ஊழல் செய்ததே இல்லை என்று சொன்னதில்லையே என்றார். திமுக அளவுக்கு இறங்கி பேசுற ஆள் நானல்ல என்ற முதல்வர், ஆனால் அரை நூற்றாண்டுக்கும் கீழ் போய் ஆழமாக தோண்டி துருவி எல்லாத்தையும் மேல கொண்டு வந்து திமுகவின் போலி பிராண்ட் மற்றும் போலி பிம்பம் உடைக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெற்ற முதலமைச்சர் விஜயின் இந்த பேச்சு அவையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலையை உருவாக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved