Also Watch
Read this
Posted on: Feb 06, 2026 11:36 AM
By: Manigandan Raja
திமுக இளைஞரணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, உதயநிதி ஸ்டாலின் சாதனை படைத்திருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நாளை நடைபெறவுள்ள திமுக இளைஞரணி தென் மண்டல மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து, வீடியோ வெளியிட்டுள்ளார்.
விருநகரில் மாநாடு - முதல்வர் அழைப்பு
விருதுநகரில் நாளை நடைபெற இருக்கும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து வெளியிட்டுள்ள வீடியோவில் பேசி இருப்பதாவது:
கடந்த 1980ஆம் ஆண்டில், நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது தொடங்கப்பட்ட அணி, இளைஞரணி. 1949ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட திமுக என்ற இந்தப் பேரியக்கத்தின் அடுத்த தலைமுறையாக மீண்டும் இளைஞர்களிடம் நம்முடைய திமுகவை கொண்டு சேர்க்க இந்த அணியைத் தொடங்கினோம்.
எங்களுக்கு அடுத்தபடியாக, இப்போது, இந்த இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை, அந்தக் கடமையை உதயநிதி சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்.
ஐந்து லட்சம் பேர் - உதயநிதி சாதனை
திமுக மீது எப்போதும் வன்மத்தோடு இருக்கும் எதிரிகள் என்ன கட்டமைத்தார்கள்? இளைஞர்கள் இனி, திமுகவிற்கு வருவார்களா? என்று சந்தேகம் எழுப்புவது போன்று, தங்களுடைய ஆசைகளை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதையெல்லாம் உடைத்து, இளைஞரணிக்கு இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்து, உதயநிதி சாதனை செய்திருக்கிறார்.
திருவண்ணாமலையில்...
இதுபோதாது என்று மண்டல அளவில் இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் மாநாடுகளை நடத்துகிறார். ஏற்கனவே, திருவண்ணாமலையில் ஒன்றரை லட்சம் நிர்வாகிகளை கூட்டி, வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டை நடத்திவிட்டார். மிக கச்சிதமாக நடந்த அந்த மாநாட்டைப் பார்த்து, எதிர்க்கட்சிகளில் இருக்கும் பலருக்கும், தூக்கம் போய்விட்டது.
5 லட்சம் நிர்வாகிகளை ஒரு கட்சியின் துணை அமைப்பில் நியமித்து வேலை செய்வதைப் பார்த்தால், மற்ற கட்சிகள் அனைத்தும் பின்பற்றும் ப்ளூ-ப்ரிண்ட்ஐ திமுக இளைஞரணிதான் கொடுக்கப் போகிறது என்று நினைக்கிறேன். 5 லட்சம் பேருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் ஒரு ராணுவப் படையைப் போன்ற, உறுதியான கட்டமைப்பு, கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன், இது நடக்கிறது.
பிப்ரவரி 7 - விருதுநகரில் சந்திப்போம்
பிப்ரவரி 7ஆம் நாள் விருதுநகரில் கூட்டம் என்று சொன்னதும், எனக்குள் புது உற்சாகம் உண்டானது. இந்த விருதுநகர் மாநாட்டில், எதற்காக திமுக தொடர்ந்து இயங்க வேண்டும். இளைஞர்களான நீங்கள் எவ்வாறு கொள்கையுடன் செயல்பட வேண்டும். எதற்காக திமுக ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர வேண்டும் என்பது பற்றியெல்லாம், இளைஞர்களான உங்களிடம் ’ஷேர்’ செய்யப் போகிறேன். பிப்ரவரி 7 - விருதுநகரில் சந்திப்போம்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின், வீடியோவில் பேசியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved