Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை மக்களின் வீடு தேடிச் சென்றடையச் செய்யும் தமிழ்நாடு அரசின் அடுத்த திட்டமாக, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் தாயுமானவர் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பேர் பயன்பெறுவர். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ரூ.30.16 கோடி செலவாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பிற மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved