இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நிதி அகர்வால். இவர் தமிழில் வெளிவந்த ஈஸ்வரன், பூமி ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் தி ராஜா சாப். இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து முதல் முறையாக நடித்திருக்கிறார். இந்த நிலையில், தி ராஜா சாப் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ஹைதராபாத்தில் உள்ள லூலூ மாலில் நடந்தது. இதில் நிதி அகர்வால், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அளவு கடந்து குவிந்து விட்டனர். பாதுகாப்பு தடுப்புகளை மீறியதால் பதற்றமான சூழல் அங்கு நிலவியது. நிகழ்ச்சியை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியே வரும்போது நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து விட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் நிதி அகர்வால் அதிர்ச்சியடைந்தார். இதன்பின் எப்படியோ அவர் காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். ஆனால், காரில் ஏறியவுடன் அவர் முகம் கடும் கோபத்துடன் காணப்பட்டது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.