Also Watch
Read this
By: Manigandan Raja

சட்டவிரோத மது விற்பனை :
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அத்தனூர் பகுதியில் உள்ள வனச்சரகம் அலுவலகம் எதிரே பிரதான சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை ஒட்டியபடி அருகிலுள்ள வீட்டில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சந்துக்கடையில் ஒரு பீர் பாட்டிலுக்கு 100 ரூபாயும், ஒரு குவாட்டருக்கு கூடுதலாக 80 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது அதேபோல் அரசு மதுபான கடையும், சட்டவிரோத சந்துக்கடையும் ராசிபுரம் – ஆட்டையாம்பட்டி சாலையின் அருகருகே செயல்படுவதால்,மது அருந்தியவர்கள் சாலையோரங்களில் படுத்து கிடப்பது வழக்கமாகி விட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு,இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற சட்ட விரோதமாக மது விற்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது..
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் மட்டும் ஐந்து அரசு டாஸ்மார்க் மதுபான கடைகள் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. தொடர்ந்து இந்த அரசு டாஸ்மாக் கடைகளால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவதாக தொடர் புகார் எழுந்தும் நடவடிக்கை இல்லாத நிலையில் தற்போது 50க்கும் மேற்பட்ட சட்டவிரோத விற்பனை கடைகளுக்கு மாமூல் பெற்றுக்கொண்டு மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved