Also Watch
Read this
எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணியாணைகளை, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்வர் விஜய் நேரில் வழங்கினார்.

டிஎன்பிஎஸ்சி மூலம்...
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது;
சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் - மின்னியல் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என்று, மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று ஜூன் 24ஆம் தேதி வழங்கினார்.
முன்னதாக, முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தின்போது, மின்சார வாரியத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குப் பல்வேறு நிலைகளில் உள்ள 70,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதும் ஒரு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் விஜய் உத்தரவு
இதனைத் தொடர்ந்து, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தித் துறையின் மனிதவளத்தை வலுப்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து, தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கிடும் வகையில், ஓராண்டுக்குள் குறைந்தபட்சம் 15,000 பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள, முதல்வர் விஜய் உத்தரவிட்டார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் தெரிவு செய்யப்பட்ட 401 நபர்களுக்கும் வாரிய விதிமுறைகளின்படி, உடனடியாக பணி நியமன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

பணி நியமன ஆணை
இதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர் - மின்னியல் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதல்வர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசின் வெளிப்படையான ஆட்சிமுறையின் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்தப் பணி நியமனங்கள், எரிசக்தித் துறையின் செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தரமான மற்றும் தடையற்ற மின் சேவைகளை வழங்குவதற்கான மனிதவளத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகவும் இது அமையும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குழு புகைப்படம்...
இந்த விழாவில், எரிசக்தி துறையில் 401 பேருக்கும் தன் கைகளாலேயே பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் விஜய், பணி நியமன ஆணை பெற்றவர்களுக்கு மத்தியில் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும், நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார். 3 நாளில் பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு விழாவில் முதல்வரின் கையால் பணி ஆணையை பெற்றுக்கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியது.
