Also Watch
Read this
Posted on: Mar 14, 2026 11:49 AM
சென்னை, ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், நேரில் சந்தித்தார். 10 தொகுதிகள் கேட்கும் நிலையில், 6 தொகுதிகள் மட்டுமே தருவதாக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் சொல்லப்பட்டதால், கூடுதல் தொகுதி தொடர்பாக சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கூடுதல் தொகுதிகள் ஒதுக்க கோரும் திருமா?
ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று மார்ச் 14ஆம் தேதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். கூடுதல் தொகுதிகளை கேட்டு விசிக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக - விசிக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது. கூடுதல் தொகுதி தொடர்பாகவும், தேர்தல் பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. 10 தொகுதிகள் கேட்கும் நிலையில், 6 தொகுதிகள் மட்டுமே தருவதாக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவாகி உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 38 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, 196 தொகுதிகளை வைத்துக் கொண்டு, இதர கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வைகோவுக்கு நான்கு தொகுதிகள்
கூட்டணியில் இருக்கும் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு, கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு எடுத்தது. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது. இதுகுறித்து வைகோ தலைமையில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ வந்து சேர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. திமுக உடன் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு...
இந்த நிலையில், மார்ச் 13ஆம் தேதி, திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இடையே ஒப்பந்தம் இறுதி ஆனது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது
திமுக கூட்டணியில் இதுவரை...
* காங்கிரஸ் கட்சிக்கு 28 + ராஜ்யசபா 1 இடம்
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2
* மனிதநேய மக்கள் கட்சி - 2
* மதிமுக - 4
* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2
* தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை
* இதுவரை 38 தொகுதிகள் - மீதம் இருப்பது 196 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இனிமேல்...
தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம், தவாக உள்பட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது, பேச்சுவார்த்தை தொடர்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved