Also Watch
Read this
நடப்பு ஐபிஎல் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஆர்சிபியின் சொந்த மைதானமான சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தவறான முடிவாக அமைந்தது.

ஆர்சிபி அணி 250 ரன்களை குவித்தது
பெங்களூரு மைதானத்தில் எளிதாக ரன் மழை பொழியலாம் என்பதை நிரூபிக்கும் வகையில், ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர். சிஎஸ்கே பவுலர்கள் வீசிய பந்துகள் நாலாபுறமும் பறந்தன. ஓபனிங் வீரராக களமிறங்கிய கோலியை 28 ரன்களில் வீழ்த்தினாலும், மற்றொரு ஓபனரான பில் சால்ட்டும், தேவ்தத் படிக்கலும் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

இதையடுத்து வந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரும், டிம் டேவிட்டும் Depth ஓவர்களில் சூறையாட்டம் ஆடினார்கள். ‘எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ என்பது போல, சிஎஸ்கே பவுலர்களை புரட்டி எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு ஆர்சிபி அணி 250 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 70 ரன்களையும், தேவ்தத் படிக்கல் 50 ரன்களையும் எடுத்தனர்.

பெங்களூரு மெகா வெற்றி
251 ரன்கள் என்ற மெகா இலக்குடன் களமிறங்கி சிஎஸ்கே, வழக்கம் போல ஆரம்பம் முதலே சொதப்பியது. ஆர்சிபி பவுலர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து சரிந்தனர். சஞ்சு சாம்சன் 9, ருதுராஜ் கெய்க்வாட் 7, ஆயுஷ் மாத்ரே 1 என சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த பேட்டிங் ஆர்டரும் முற்றாக சிதைந்தது. பெரிய ஸ்கோரை Chase செய்ய வேண்டும் என்பதற்காக, தேவையில்லாத நேரத்தில் பெரிய ஷாட்களை ஆடி, சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை பறிகொடுத்தனர். இருப்பினும் சர்ஃபராஸ் கான் 50, பிரசாந்த் வீர் 43, ஜேமி ஓவர்டன் 37 ரன்களை எடுத்து கடைசி வரை போராடினர். ஆனால், 19.7 ஓவர்களில் 207 ரன்களுக்கு சென்னை அணி ஆல் அவுட் ஆனது. 43 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு மெகா வெற்றி பெற்றது. இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved