Also Watch
Read this
த.வெ.க. அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே ஆட்சிக்கான ஆதரவு தொடரும் என, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்து உள்ளார். நாளை நடைபெறும் த.வெ.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மார்க்சிஸ்ட் ஆலோசனை
சென்னையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மாநிலச் செயலர் பெ.சண்முகம் கூறியதாவது;
தவெக தலைமையில் கூட்டணி மற்றும் அதற்கான செயல்திட்டம் உருவாக்குவது, இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஆலோசிக்க நாளை செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் தவெக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்குமாறு அமைச்சர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

மார்க்சிஸ்ட் பங்கேற்காது
ஆனால், தவெக கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.
தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தொடரும். தமிழக மக்களின் நலன் கருதி, உழைப்பாளர்களின் நலன் கருதி அரசுக்கு ஆலோசனை வழங்குவோம். ஏற்பதும் நிராகரிப்பதும் அவர்கள் விருப்பம்.

சட்டமன்றம், சண்டைமன்றம்...
தமிழக சட்டமன்றம் என்பது சண்டை மன்றமாக இருக்கிறது. முறையாக அவை நடப்பதில் ஆளும்கட்சியைப் போல் எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது என்றாலும் ஆளும் கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. மக்களுடைய வரிப் பணத்தில் சட்டப்பேரவை நடக்கிறது. அதை விரயம் செய்யக்கூடாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏற்க முடியாது
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் பேரவையில் கேட்ட கேள்விகளில் ஒரு கேள்விக்காவது முதல்வர் பதில் கூறினாரா?. அவர் முறையாக பதில் கூறவில்லை. இதுவரை இதுபோன்று நடக்கவில்லை. பேரவையில் நினைத்ததை எல்லாம் முதல்வர் பேசுகிறார். அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. எங்களைவிட இங்கு ஊழலை எதிர்த்து போராடிய வேறு கட்சியை சொல்லுங்கள் பார்க்கலாம்.

சிறுபிள்ளைத்தனமானது...
இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில், மிசாவில் கைதானவர்கள் சிறையில் பட்ட கஷ்டம், வன்கொடுமை பற்றி உள்ளது. தவெக அமைச்சர்கள் முதலில், ‘மிசா’ பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

மிசா கொடுமை தொடர்பாக நிறைய ஆவணங்களும் உள்ளன. ’மிசாவில் கைதானவர்கள் சமூக விரோதிகள்,’ என்று நிர்மல் குமார் பேசியிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அதேபோல் சர்க்காரியா கமிஷனில் யார் மீதும் வழக்கு போடவில்லை.

முதல்வர் 3 கோப்புகள் கையில் இருக்கிறது எனக் கூறுகிறார். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? அதைவிடுத்து 50 ஆண்டுகளுக்கு முன் உள்ள சர்க்காரியா கமிஷன் பற்றி ஏன் பேசுகிறார். இது திசைதிருப்பும் தந்திரம். தவெக அரசுக்கு ஆதரவு என்பது அவர்கள் நிலைப்பாட்டைப் பொருத்ததே.
இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved