Also Watch
Read this
Posted on: Mar 21, 2026 04:12 PM
By: Manigandan Raja

அதிமுக கூட்டணியில், எல்லாம் டெல்லியில் இருந்து தான் முடிவு செய்யப்படுகிறது என, இபிஎஸ் டெல்லி பயணத்தை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்து உள்ளார்.
அடிமைக் கூட்டத்தை அனுமதிக்க மாட்டார்கள் :
தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் எங்களுக்கு என்ன? என்ற மனநிலையுடன், கூட்டணிப் பேச்சுவார்த்தை என, டெல்லியில் அதிமுக - பாஜக பேச்சு வார்த்தையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தேர்தல் களத்தைச் சந்திப்பதற்கே டெல்லியின் சம்மதம் வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களின் கைகளில் தமிழ்நாடு சிக்கிக் கொண்டால், ஒவ்வொரு நாளும் என்ன பாடுபட வேண்டியிருக்கும் என்றும், தமிழ் மக்கள் ஒருபோதும் டெல்லியின் ஆதிக்கத்தையும், அதன் அடிமைக் கூட்டத்தையும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறி உள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு மடல் :
இதுதொடர்பாக, தொண்டர்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது;
கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியைச் சிறப்பாக நடத்தினோம்.
ஆனால், அது நமக்கு எளிதானதாக இல்லை. தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத பழிவாங்கும் போக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு, மாநில உரிமைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தபடியே, ஜனநாயகம் காக்கும் அறப் போர்க் களத்தில் நின்றபடியே தான் எண்ணிக்கையில் அடங்காத சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.
தமிழ்நாடு vs டில்லி :
2026 தேர்தல் களத்தை தமிழ்நாடு அணிக்கும் டில்லி அணிக்குமான தேர்தல் என்று தொடர்ந்து சொல்லி வருகிறேன். தமிழ்நாடு VS டில்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டில்லியில் இருந்து தான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டில்லியில் இருப்பது எதற்காக? தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காகவா? தமிழ்நாட்டில்
நிறைவேற்றப்படாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா? மாநில உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகவா? சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகவா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை.
களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம் :
தங்கள் சுயநலனுக்காகச் சொந்தக் கட்சியை அடமானம் வைத்ததுபோல, தமிழ்நாட்டையும் டில்லியிடம் அடகு வைக்கத் தயங்காதவர்கள் என்பதை மக்கள் அறிவார்கள். இனி எதிர்க்கட்சியினர் எடுக்கும் முடிவு என்பது டில்லி எடுக்கும் முடிவுதான் என்பதையும் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்பதற்கும், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்குமான வலிமை தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே உண்டு என்பதே மக்களின் உறுதியான நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாக்கியது திராவிட மாடல் ஆட்சி. அதனால் நாம் மக்களிடம் செல்வோம். களத்தில் நின்று வெற்றியைப் பெறுவோம்.
உங்களின் உழைப்பின் மீதுள்ள நம்பிக்கை :
பேரறிஞர் அண்ணா நம்மை விட்டு மறைந்தபோது, தி.மு.கழகத்தையும் ஆட்சியையும் கருணாநிதி தன் தோளில் சுமந்து, 1971ஆம் ஆண்டு தேர்தலில் மகத்தான வெற்றியுடன் தொடர்ந்து ஆட்சியில் அமரச் செய்தார்.
அதுபோல நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கொள்கைப் பாதையில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து அமைந்திட, 2026 தேர்தல் களத்தில் நிச்சயம் வெல்வோம் என உறுதிகொள்கிறேன், உடன்பிறப்புகளே, உங்களின் அயராத உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையால். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved