Also Watch
Read this
By: Manigandan Raja

6-ம் வகுப்புக்கு மேல் படிக்க தாலிபான்கள் தடை விதிப்பு
ஆப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு, 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதன் பிறகு, பெண்களுக்கு எதிராக கடும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, பெண் குழந்தைகள் 6-ம் வகுப்புக்கு மேல் பள்ளிகளுக்கு செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பெண்கள் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி மறைவு
சீனாவின் முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி 98 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா அரசுக்கு சொந்தமான தொழில்துறைகளில் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை ஏற்படுத்திய அவர், உடல் நலக் குறைவால் காலமானதாக அரசின் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகின் 2-வது பொருளாதாரம் மிக்க நாடாக சீனா உருவாவதற்கு வித்திட்டவர்.

1998-ல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2003-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொண்டதால் அவருக்கு "பாஸ்" மற்றும் "மேட்மேன் ஜூ" போன்ற புனைப்பெயர்களும் உண்டு.
ஏரியில் படகு கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
ஜிம்பாப்வே ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் உள்ள கரிபா ஏரியை ஜிம்பாப்வே மற்றும் ஜாம்பியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்கின்றன.

200 கிலோ மீட்டர் அகலமுள்ள இந்த ஏரியில் அதிக பயணிகளை ஏற்றிச்சென்ற படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 பேர் உயிரிழந்ததாகவும், 27 மாயமானதாகவும், 77 பேர் மீட்கப்பட்டதாகவும் முதல் கட்ட தகவல் வெளியானது. இந்த சூழலில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved