Also Watch
Read this
By: Manigandan Raja

துக்கம் அனுசரிக்க இடமின்றி நேபாள மக்கள் வேதனை
நேபாள வெள்ளத்தில் குடும்பத்தினரை இழந்தவர்கள், உடல்கள் கிடைக்காததால் "குஷ்" புல்லால் செய்யப்பட்ட உருவங்களைப் பயன்படுத்தி தங்கள் அன்புக்குரியவர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர். வெள்ள நீர் குடும்ப உறுப்பினர்களை மட்டுமின்றி வீடுகளையும் அடித்துச் சென்றதால், தங்குமிடம் மற்றும் சமையல் எரிவாயு இன்றி தவிக்கும் இவர்கள், துக்கச் சடங்குகளை அனுசரிக்கக்கூட இடம் இல்லையென குமுறுகின்றனர்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200ஐ தாண்டியது
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 - ஐ தாண்டிய நிலையில், பெரு வெள்ளம் நுவாகோட் மாவட்டத்தை துடைத்துச் சென்ற பேரழிவின் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.

எழில் கொஞ்சும் பசுமையான நகராக இருந்த தேவிகாட் பகுதி தற்போது சேறும், சகதியுமாகவும் உருக்குலைந்து காட்சியளிக்கிறது. பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால், மக்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து வருகின்றனர்.
பெரு வெள்ளம் - உயிரிழப்பு 1,252-ஆக அதிகரிப்பு
நேபாள பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,252-ஐ தொட்டுள்ளது. மாயமான 4ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலையை எண்ணி குடும்பத்தினரும், உறவினர்களும் கண்ணீர் வடித்து வருகின்றனர். பசுமை போர்த்திய தேவிகாட் பகுதி தற்போது சேறும் சகதியுமாக உள்ளதால், உயிர் பிழைத்த அப்பாவி மக்கள் வாழ்விடமின்றி தவித்து வருகின்றனர். மாயமானவர்களை தேடும் பணியில் சுமார் 21 ஆயிரம் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved