தமிழ்நாடு

சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்
என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது.

தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரி
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற
உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் சராசரியாக 100 டி.எம்.சி
தண்ணீர் கடலில் கலக்கிறது. அதிலிருந்து 5 டி.எம்.சி தண்ணீரை பயன்படுத்தி சேலம்
மாவட்டம் முழுமைக்கும் காவிரி உபரிநீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்
என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். குறைந்தபட்சம் சேலம்
மாவட்டத்தில் காவிரி, சரபங்கா, திருமணிமுத்தாறு மற்றும் வசிஷ்ட நதிகளை இணைத்து
உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில்
நிலத்தடி நீர்மட்டம் 1400 அடியில் இருந்து 200 அடிக்கு மாறும் நிலை ஏற்படும்.

சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு
நடத்திடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பை
நடத்த வேண்டும் என்று கூறி ஒதுங்காமல், திமுக அரசு தமிழகத்தில் உடனடியாக
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட முன்வர வேண்டும். இதன் மூலம் அனைத்து
சமுதாயத்தினருக்கும் உரிய இடஒதுக்கீடு கிடைக்கும் நிலை உருவாகும். இல்லையெனில்
இப்பிரச்சினையில் ஒத்த கருத்துடைய கட்சிகளை இணைத்து பாமக போராட்டம் நடத்தும்.

மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார வேண்டும். கொளத்தூர் பகுதியில் பாலாற்றின்
குறுக்கே தோனிமடுவில் தடுப்பணை கட்ட வேண்டும். சென்னை மழை வெள்ள பாதிப்பை
தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு போதிய அளவில்
எடுக்கவில்லை. தற்போது வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடங்கியுள்ள
நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். சென்னையில் மழை பாதிப்புகளை தடுத்திடும்
வகையில் வெளிநாடுகளில் இருப்பது போன்ற முன்மாதிரி தொழில்நுட்ப நடவடிக்கைகளை
மேற்கொண்டு புதிதாக 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். கடந்த 10 வருடங்களில்
வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
முழுமையான வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.

தொப்பூர் பகுதியில் விபத்து அபாயம் மிக்க சாலையை சீரமைக்க மத்திய அரசு ரூ.775
கோடி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி
இப்பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது. சீரமைப்பு பணிகளை
உடனடியாக மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்
டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாடர்ன் தியேட்டர்
விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய போது அருகே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களை
பார்த்து நாங்களும் ஒரு செல்பி எடுத்து விடலாமா என நக்கலாக பேசினார் தொடர்ந்து
மாடர்ன் தியேட்டர் விவகாரம் குறித்து நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை எனவே
அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்பது எனது கருத்து.

நாடாளுமன்றத் தேர்தலில் பாமக நிலைப்பாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து
பேசி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அன்புமணி
தெரிவித்தார்.

சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு உடனே நடத்த வேண்டும்   பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

00 Comments

Leave a comment