தங்க கொலுசுகளை திருடிய மடப்புரம் கோயில் உதவி ஆணையர் தற்காலிக பணிநீக்கம்,
பொறுப்பு அதிகாரி நியமனம்
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல்
எண்ணிக்கையின்போது தங்க கொலுசுகளை திருடிய உதவி ஆணையர் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டார். மேலும் கோயில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.
மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன்
கோயிலில் நவ.8-ம் தேதி உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கை
முடிந்ததும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, தலா 4 பவுன்
மதிப்பிலான 2 தங்க கொலுசுகளை அக்கோயில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி எடுத்தது
தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார்,
மானாமதுரை ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது திருடிய
கொலுசுகளில் ஒன்றை திருப்பி கொடுத்த வில்வமூர்த்தி, மற்றொன்றை தர
மறுத்துவிட்டார்.
இதுகுறித்து ஆய்வாளர் அய்யனார் அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீஸார்
வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து வில்வமூர்த்தியை தற்காலிக
பணி நீக்கம் செய்து இந்துசமய அறநிலையத்துறை செயலர் மணிவாசன் உத்தரவிட்டார்.
மேலும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பொறுப்பு அதிகாரியாக ராமநாதபுரம்
இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் நியமிக்கப்பட்டார்.
![பத்ரகாளியம்மன் கோயிலில் தங்க கொலுசுகள் திருட்டு கோயில் உதவி ஆணையர் சஸ்பெண்ட்](https://newstamil.tv/admin/images/news/newstamil_2320741699790033.webp)
00 Comments
Leave a comment