Also Watch
Read this
திமுகவில் கட்டமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள் அமைக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் மட்டும் 10 மாவட்டங்கள் அமைக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இதன்படி, தி.மு.க. கட்சி நிர்வாக மாவட்டங்களில் எண்ணிக்கை 77ல் இருந்து 110 ஆக உயர்ந்தது.

திமுகவில் இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில் நடவடிக்கை எனக் கூறி உள்ள மு.க.ஸ்டாலின், நகர, ஒன்றிய, பேரூர்களை பிரிக்க 15 நாட்களுக்குள் ஆலோசனை வழங்க கட்சியினருக்கு அழைப்பு விடுத்தார்.

திமுக செயற்குழுக் கூட்டத்தில்...
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
திமுக என்ற பேரியக்கம், கொள்கை, அமைப்பு முறை, செயல்பாடு, உடன்பிறப்பு என்ற நான்கு அடிப்படைகளைக் கொண்டு இயங்கும் இயக்கம். இந்த நான்கையும் காலங்கள் தோறும் நாம் புதுப்பித்தும், மேன்மைப்படுத்தியும், கூர்தீட்டியும், செழுமைப்படுத்தியும் வந்து இருக்கிறோம். இவை அனைத்தும் கோடிக்கணக்கான உடன்பிறப்புகளின் எண்ணங்கள் அடிப்படையில் தான் அமைந்துள்ளன. இந்த அடிப்படையில், கடந்த 22ஆம் தேதி அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிர்வாக சீரமைப்புக்கு தேவையான மிகமுக்கியமான முடிவுகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றி இருக்கிறோம்.

110 ஆக அதிகரிப்பு
திமுக தொடங்கப்பட்ட நாள் முதல், இதுவரையில் 15 முறை அமைப்பு ரீதியாகத் தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து உள்ளோம். இதன் தொடர்ச்சியாக, 16ஆவது திமுக அமைப்புத் தேர்தலை நடத்திடவும், பல்வேறு அமைப்பு ரீதியாக நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்படவும் பல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதில் மிக முக்கியமானது மாவட்ட செயலாளர்கள் குறித்த தீர்மானம். இதில், தற்போதுள்ள மாவட்ட செயலாளர் எண்ணிக்கையை 77ல் இருந்து 110 ஆக அதிகரித்து, எந்தெந்த தொகுதி எந்தெந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டும் என்பதை வரையறுப்பதற்கான அதிகாரம் தலைவரான எனக்கு வழங்கப்பட்டது.

15 நாட்களுக்குள்...
மறு சீரமைப்புக் குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சி முன்னணியினருடன் கலந்தாலோசித்து, தமிழகத்தில் உள்ள தொகுதிகளை 110 மாவட்டங்களாகப் பகுத்து அறிவிக்கிறேன். இதில், அதிகமான மக்கள் தொகை இருப்பதன் காரணமாகச் சோழிங்கநல்லூர் தொகுதி மட்டும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த 110 மாவட்டங்களில், தற்போதுள்ள மாவட்ட செயலாளர்கள், தலைமையால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, மேற்குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களின் அடிப்படையில், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட, கிளை அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் என்றும், தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையிலும், மறு சீரமைப்புக்குழு மூலம் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.







© Copyright Newstamil 24x7 2026. All rights reserved