Also Watch
Read this
By: Manigandan Raja

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் ராஜாவாய்க்காலில் தண்ணீர் வரத்து இல்லாத நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைகள், திரையரங்குகள் மற்றும் பேரூராட்சி கழிவுநீர் முழுமையாக வாய்க்காலில் கலப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனால் பாசன வாய்க்காலில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி கடுமையான மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காட்டுப்புத்தூர் ராஜாவாய்க்காலை நம்பி சுமார் 6,000 ஏக்கர் விவசாய நிலங்களில் வாழை, வெற்றிலை, மஞ்சள் மற்றும் கால்நடை தீவனப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விளைச்சல் கணிசமாக குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.2 லட்சம் வரை செலவழித்து சாகுபடி செய்தாலும், அறுவடையின் போது ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விளைபொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாசுபட்ட நீரில் இறங்கி விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தோல் அரிப்பு, தோல் நோய்கள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, மஞ்சள் காமாலை, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.
இந்த மாசுபட்ட நீரை கால்நடைகள் அருந்துவதால் அவற்றின் உடல்நலனும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ராஜாவாய்க்காலை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தூர்வாரி பராமரிக்க வேண்டும், பாசன வாய்க்கால்களை சுத்தப்படுத்தி விவசாய நிலங்களையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved