Also Watch
Read this
Posted on: Feb 04, 2026 07:32 AM
By: Manigandan Raja
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பேருந்து நிலையத்தில், போதை உச்சத்தில் இருந்த சிறுவர்கள் இருவர், அரசு பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி வம்புக்கு இழுத்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை சிறுவர்களால் பேருந்து நிலையமே களேபரமாக காட்சி அளித்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
காண்போரைக் கதி கலங்க வைத்த சம்பவம்
பேருந்து நிலையத்தில், பேருந்துக்காக காத்திருந்த அரசு பள்ளி மாணவிகளிடம், போதையில் இருந்த சிறுவர்கள் இருவர் ஆபாசமாக பேசி அட்ராசிட்டியில் ஈடுபட்டு, அவர்களை தாக்க முயன்ற களேபரமான காட்சி, காண்போரை கலங்க வைத்துள்ளது.
ஆபாசமாக பேசி வம்பு
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்,ராமஞ்சேரி பகுதியை சேர்ந்த மாணவிகள் சிலர் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். மாணவிகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக கனகம்மாசத்திரம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த இரு சிறுவர்கள், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பேருந்திற்காக காத்திருந்த மாணவிகளிடம் சென்ற போதை சிறுவர்கள் அவர்களிடம் ஆபாசமாக பேசி வம்புக்கு இழுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் பொறுத்திருந்த மாணவிகள் வெகுண்டு எழுந்து போதை சிறுவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிகளை தாக்க முயற்சித்தும், வாய்க்கு வந்தபடி ஆபாசமாக திட்டி தீர்த்துள்ளனர் போதை சிறுவர்கள்.
சிறுவர்களுக்கு ஆதரவாக...
பயந்து, கூனிக்குறுகி போய், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் தஞ்சம் அடைந்தனர் மாணவிகள். இருப்பினும், அந்த சிறுவர்கள் மாணவிகளை விடாமல் வம்புக்கு இழுத்துள்ளனர். சிறுவர்களுக்கு ஆதரவாக அங்கிருந்த நின்றிருந்த பெண் ஒருவரும் மாணவிகளை ஆபாசமாக திட்டி தீர்த்ததுதான் உச்சபட்சம்.
தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்
பயத்தில், நடுநடுங்கி போய் செய்வது அறியாமல் திகைத்து நின்ற மாணவிகளுக்கு ஆதரவாக அங்கிருந்த மக்கள் மற்றும் தகவல் அறிந்து மாணவிகளின் பெற்றோரும் பேருந்து நிலையத்தில் கூடினர். மாணவிகளை ஆபாசமாக திட்டி அட்ராசிட்டியில் ஈடுபட்ட போதை சிறுவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண்ணின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாணவிகளுடன் பெற்றோர் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டும், கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்?
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருத்தணி ஏ.எஸ்.பி. சுபம் திமான், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்ட மாணவிகளிடமும் அவர் கனகம்மாசத்திரம் காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, கொதித்து எழுந்த மாணவிகள் தங்களை கொச்சைப்படுத்தி பேசியவர்களுக்கு காவல்நிலையத்தில் அமரவைத்துள்ளீர்கள்... ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்? என கூறி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறுவர்கள், பெண் கைது
மாணவிகளை ஆபாசமாக பேசி, தகராறு செய்த பிரகாஷ் உள்பட இரு சிறுவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த மதுமிதா என்பவரையும் கனகம்மாசத்திரம் போலீஸார் கைது செய்தனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என போலீஸாரிடம் கோரிக்கை விடுத்தனர் மாணவிகள்.
காவல்துறையினர் இரும்பு கரம்...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போதை ஆசாமிகளின் அட்ராசிட்டியை காவல்துறையினர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினால், மட்டுமே மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved