Also Watch
Read this
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிட தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்பது சின்ன சந்தேகம் தான் என்று, தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு கூறி உள்ளார்.

என்டிஏ வெற்றி பெறும்
இதுதொடர்பாக குஷ்பு கூறியதாவது;
புதுச்சேரியில், என்டிஏ கூட்டணி தான் வெற்றி பெறும். புதுச்சேரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் நல்ல வளர்ச்சி தரப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது. ஆனால், புதுச்சேரியில் பாதுகாப்பான ஆட்சி நடக்கிறது. பெண்களுக்காக பல திட்டங்களை இந்திய அரசு கொண்டு வந்தது. இதனால் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, புதுச்சேரியில் வெற்றி பெறும்.

விஜய் தனித்து போட்டி
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விஜய்யின் தவெக தனித்து போட்டியிடுவதற்கு, வாழ்த்து தான் சொல்ல முடியும். 234 தொகுதிகளுக்கும் அவருக்கு வேட்பாளர்கள் இருக்கிறார்களா? என்பது சின்ன சந்தேகம் தான்.
என் வழியில் நான் தான் ராஜா என கூறிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை விஜய்க்கும் உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது. எங்கள் கூட்டணி சார்பில், முதல்வராக இபிஎஸ் அமர்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறீர்களா?
கட்சிக்காக வேலை செய்கிறோம், கட்சி சொல்வதைத் தான் கேட்போம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் பாஜக ஆட்சியில் பங்கு கேட்குமா? என்பதை முடிவு செய்ய கட்சி மேலிட பொறுப்பாளர்கள் உள்ளனர்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.

பாஜக வேட்பாளர் மனு தாக்கல்
புதுச்சேரியில், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனுவை மேரி ஹால் நகராட்சி கட்டிடத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் இன்று தாக்கல் செய்தார். அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மான்டவியா, பாஜக தமிழக துணைத் தலைவர் குஷ்பு ஆகியோர் உடன் வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved