Also Watch
Read this
By: Manigandan Raja

தலைவியின் கணவர் மீது தாக்குதல் :
சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில் அமரர் ஊர்திக்கு வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் மீது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மெய்யான மூர்த்தி வயது 47. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் ஆவார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, கிராமத்தில் உயிரிழந்த ஒருவரின் உடலை அமரர் ஊர்தியில் கொண்டு வந்தபோது.
அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமார், அரவிந்த், அண்ணாமலை, குணா மற்றும் முத்துராஜா ஆகியோர் வாகனத்திற்கு வழிவிடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை மெய்யானமூர்த்தி தட்டிக்கேட்டதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் முன்விரோதமாக மாறியதாக தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 18-ம் தேதி மாலை பச்சேரி கிராமத்தில் சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த மெய்யானமூர்த்தியை 5 பேரும் சேர்ந்து தாக்கியதுடன், அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த மெய்யானமூர்த்தி முதலில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved