Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 08:03 AM
By: Manigandan Raja
சென்னை, தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த பீகார் மாநில இளைஞரின் 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தையே ஒரு கும்பல் தீர்த்து கட்டியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பீகார் இளைஞரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று, உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய சொந்த ஊர்க்கார நயவஞ்சக நண்பர்களை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறைய வைத்த சம்பவம்
பைக் ஷோரூம் அருகே இளைஞரின் சடலம். குப்பை கிடங்கில் மனைவி சடலம். கூவம் ஆற்றில் பிஞ்சு குழந்தையின் சடலம். இப்படி வெவ்வேறு இடங்களில் சடலம் கிடக்கும் அளவுக்கு, ஒரு குடும்பத்தையே நயவஞ்சக நண்பர்கள் கூட்டம் கருவறுத்திருப்பது அனைவருக்குமே பேரதிர்ச்சிதான்.
வாகன ஷோரூம் அருகே சாக்கு மூட்டை
சென்னை, அடையாறு இந்திரா நகர் 1ஆவது அவென்யூ சாலையில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே கடந்த 26ஆம் தேதி சாக்கு மூட்டை ஒன்று ரத்தம் வழிந்த நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், சாக்குமூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அதில், தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞரின் சடலம் ஒன்று இருந்துள்ளது. அதனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், சாக்குமூட்டை கிடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், 2 இளைஞர்கள் பைக்கில் வந்து சாக்குமூட்டையை வீசிவிட்டு சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து, அந்த பைக் எண்ணை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு, சாக்கு மூட்டையில் சடலமாக இருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு பேப்பரும் கிடைத்தது.
அதிர வைத்த குற்றவாளிகள்
அந்த பேப்பரில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டு பேசினர் காவல்துறையினர். அதில், ஒரு எண் அடையாறில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலக எண் என்பது தெரியவந்தது. அங்கு சென்று நேரில் விசாரித்த போது, சாக்கு மூட்டையில் சடலமாக இருந்தது பீகார் மாநிலத்தை சேர்ந்த கௌரவ் குமார் எனக்கூறிய ஊழியர்கள், தற்போது வேலைக்கு ஆள் தேவையில்லை, ஒருவேளை தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி, அவரை அனுப்பி வைத்ததாக கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் கௌரவ் குமார் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் அங்கேயே தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கௌரவ் குமாரின் நெருங்கிய நண்பர்களான 7 பேர் மீது போலீசாரின் விசாரணைகோணம் திரும்பியது. அதில், கௌரவ் குமாரை மட்டும் தாங்கள் கொலை செய்யவில்லை அவரது மனைவியை கொலை செய்து பெருங்குடி குப்பை கிடங்கிலும், அவரது 2 வயது ஆண் குழந்தையை கொலை செய்து அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றிலும் வீசியதாக கூறி அதிர வைத்துள்ளனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல்
இந்த வாக்குமூலத்தை கேட்டு கிறுகிறுத்த போலீசாருக்கு அது உண்மைதானா? அல்லது வழக்கை திசைதிருப்ப நாடகம் ஆடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும், அவர்கள் கூறிய 2 இடங்களிலும் சடலங்களை தேட ஆரம்பித்தனர். அதில், கௌரவ் குமாரின் குழந்தையின் உடல் மத்திய கைலாஷ் பகுதி கூவம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டது. இதையடுத்து, பெருங்குடி குப்பைக்கிடங்கில் கௌரவ் குமாரின் மனைவியின் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் போலீசார். இதுஒருபுறமிருக்க, பீகாரை சேர்ந்த ஒரு குடும்பத்தையே அதே மாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் ஒன்று சேர்ந்து கருவறுத்தது ஏன் என்பதுகுறித்து, பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
தலைக்கேறிய மது போதை
ஜனவரி 21ஆம் தேதி சென்னைக்கு வேலை தேடி வந்த கௌரவ் குமார் 22ஆம் தேதி கிருஷ்ண பிரசாத் என்பவர் மூலமாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு, வேலை கேட்டு சென்றார். அவர்கள் வேலை இல்லை என கூறியதும், ஏற்கனவே ஸ்ரீபெரும்பத்தூரில் ஒன்றாக வேலை பார்த்த சிக்கந்தர் என்பவனிடம் 23ஆம் தேதி வேலை கேட்டுள்ளார். இதையடுத்து வேலை வாங்கி தருவதாக தரமணி பாலிடெக்னிக் கல்லூரிக்கு வரவழைத்து தங்க வைத்தார். 24ஆம் தேதி வேதியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள சிக்கந்தர் அறையில் குடும்பத்துடன் தங்கி இருந்த கௌரவ் குமார் உடன் நண்பர்களான நரேந்திரகுமார், ரவிந்திரநாத், பிகாஷ் ஆகியோர் மது அருந்தினர். நள்ளிரவு போதை தலைக்கேறிய நிலையில், கௌரவ் குமார் மனைவியிடம் 5 பேரும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
கணவர், மனைவி, குழந்தை...
மனைவியின் கதறல் சத்தத்தைக்கேட்டு எழுந்த கௌரவர் குமார், நண்பர்களை தள்ளிவிட்டு தடுக்க முயன்றார். ஆனால், உச்ச போதையில் இருந்த நயவஞ்சக நண்பர்கள் கூட்டம், கௌரவ் குமாரை கீழே தள்ளி தலை மற்றும் முகத்தில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். எதுவுமே அறியாத குழந்தை அருகிலேயே அழுது கொண்டிருந்தது. அதனை கேட்டு ஆத்திரமடைந்த நயவஞ்சக நண்பர்கள் குழந்தையின் தலையை தரையில் பலமுறை ஓங்கி அடித்து கொலை செய்துள்ளனர். அதோடு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கௌரவ் குமாரின் மனைவியையும் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளனர்.
5 பேரையும் கைது செய்த போலீசார்
இதையடுத்து 25ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்த போது 3 பேரும் சடலங்களாக கிடந்தனர். அன்று இரவு 3 பேரின் சடலங்களையும் தனித்தனி சாக்கில் கட்டி பைக்கில் எடுத்து செல்ல முடிவு செய்த அவர்கள் முதலில் அந்த பெண்ணின் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசினர். அதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் பகுதி கூவம் ஆற்றிலும் வீசிவிட்டு கௌரவ் குமாரின் சடலத்தை எடுத்து கொண்டு அடையாறு முகத்துவாரம் பகுதிக்கு சென்றனர். அப்போது இந்திரா நகர் முதல் தெருவில் சடலம் சாக்கு மூட்டையுடன் கீழே விழுந்தது. அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததால் மீண்டும் மூட்டையை தூக்காமல் அங்கேயே போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கௌரவ் குமாரின் நயவஞ்சக நண்பர்கள் 5 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved