Also Watch
Read this
தமிழ்நாட்டில், பாஜக கபளீகரம் செய்த அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விட்டதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி காட்டமாக கூறியுள்ளார்.

சோளிங்கரில் ராகுல்காந்தி
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, அடிப்படையிலேயே தமிழர்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒடுக்க பார்க்கிறார்கள்...
சோளிங்கர் அருகே பாண்டியநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது, திமுக வேட்பாளர்கள் அமைச்சர் ஆர்.காந்தி, ஈஸ்வரப்பன், காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினம், விசிக வேட்பாளர் எழில் கரோலின் ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பேசியதாவது:

இந்த தேர்தல் மூலமாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தமிழகத்தினுள் நுழைய முயல்கிறது. அதனை நாம் அனுமதிக்கக்கூடாது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் நரேந்திர மோடி, அமித் ஷா தொகுதி மறுவரையறைச் சட்டத்தை கொண்டுவர முயன்றனர். அதனை, நாம் முறியடித்துள்ளோம்.

மக்களவையில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வருவதாக சொல்கிறார்கள். உண்மையில் அவர்கள் உண்மையை குழிதோண்டி புதைக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைக்க நினைக்கிறாா்கள். தமிழகத்தையும், வடகிழக்கு மாநிலங்களையும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மோடி சிதைக்க முயற்சிக்கிறார்.

பாஜக ஆள முடியாது
ஊழலில் மலிந்துள்ள அதிமுகவை பாஜக முழுவதுமாக கைப்பற்றி வருகிறது. அதிமுகவை பலவீனப்படுத்தி பாஜக பயன்படுத்தி வருகிறார்கள். இருப்பினும், தமிழகத்தை பாஜக ஆளமுடியாது. தமிழகத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தான் ஆளவேண்டும். தமிழகத்தை யாரும் முகமூடி போட்டுக் கொண்டு ஆளமுடியாது. நாங்கள் டில்லியை ஆளும் போது தமிழகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்
அதிமுகவை தமிழ்நாட்டில் ஆட்சியில் அமர்த்த, மோடி விரும்புகிறார். தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்குத் தெரியும். ஸ்டாலின் சுதந்திரமானவர், மோடியால் அவருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved