Also Watch
Read this
By: Manigandan Raja

மெட்டாவின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி :

மே மாதத்திற்குள் 8 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கையை பெரும் நிறுவனங்கள் மேற்கொண்டு வருவது ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெஸ்புல்லாதான் காரணம் என மேக்ரான் குற்றஞ்சாட்டு :
தெற்கு லெபனானில் பணியில் இருந்த பிரான்ஸை சேர்ந்த சர்வதேச பாதுகாப்பு படைகளின் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு அமைப்பான ஹெஸ்புல்லாதான் காரணம் என்றும், லெபனான் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு :
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..! 40 நாட்கள் நீடித்த இஸ்ரேல் - ஈரான் போரில், ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் லெபனானில் மட்டும் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள அனுமதி :
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக் கொள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை அமெரிக்கா நீட்டித்துள்ளது. ஈரான் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது.
இன்னும் கச்சா எண்ணெய் விநியோகம் சீரடையாததால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கிக் கொள்ள மே 16-ம் தேதி வரை 30 நாட்களுக்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைதிப்படை வீரர்கள் மீதான தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் :
லெபனானில் ஐ.நா. அமைதிப்படை வீரர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா அமைதிப்படை வீரர்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐநா வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். 3 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை குறிவைத்து வார்த்தை போரா?

தனது சமீபத்திய கருத்துகள், அமெரிக்க அதிபர் ட்ரம்பை நோக்கமானதாக கொண்டவை அல்ல என போப் லியோ தெரிவித்துள்ளார். அங்கோலாவுக்கான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் விவாதத்தில் ஈடுபடுவதில் தனக்கு துளியும் ஆர்வம் இல்லை எனவும், தனது தகுதிக்கு அது அழகானதல்ல எனவும் கூறினார்.
இந்தியாவுடனான ஈரான் உறவு மிகவும் வலுவானது" :

இந்தியாவுடனான தங்களது நாட்டின் உறவு மிகவும் வலுவானது எனவும், அது மேலும் வலுவடையும் எனவும் ஈரான் உச்ச தலைவரின் இந்திய பிரதிநிதி அப்துல் மஜித் ஹக்கீம் இலாஹி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசிய அவர், பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனவும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் மற்றும் டேங்கர்கள் செல்வதற்கு இந்தியா பயனடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முற்றுகை தொடரும் வரை ஹோர்முஸ் மூடப்படும் :
ஹோர்முஸ் நீரிணை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக அறிவித்துள்ள ஈரான், அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை நீரிணை மூடப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் போக்குவரத்து மீண்டும் முடக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்துக்கு ஹிஸ்புல்லா அமைப்பு நிபந்தனை :

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதாவது, லெபனானை விட்டு இஸ்ரேலிய படைகள் முழுவதுமாக வெளியேற வேண்டும் எனவும்.
வான், தரை மற்றும் கடல்வழி தாக்குதல்களை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார். மேலும், மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved