Also Watch
Read this
By: Manigandan Raja

பிரதமர் மோடியுடன் சிறந்த உரையாடலை மேற்கொண்டேன் :

மேற்கு ஆசியா மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பான இராஜதந்திர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியுடன் மிகச் சிறந்த உரையாடலை மேற்கொண்டதாக தெரிவித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபரிடம் இருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததை பிரதமர் மோடி தெரிவித்திருந்த நிலையில் டிரம்ப் இதனை தெரிவித்தார்.
இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் :

இஸ்ரேல் - லெபனான் இடையே இன்று முதல் 10 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.34 ஆண்டுகளுக்குப் பிறகு இருதரப்பினரும் வாஷிங்டனில் நேரடியாக சந்தித்ததில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதோடு சேர்த்து 10 போர்களை நிறுத்தியுள்ளதாகவும் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புதல்-டிரம்ப் :
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் டிரம்ப், ஆறு வார கால மோதலுக்குப் பிறகு அமெரிக்காவும் ஈரானும் ஒரு ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாகவும், இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆயுதங்களால் லாபம் பார்க்கும் கொடுங்கோலர்கள் :
ஆயுதங்களால் கொடுங்கோலர்கள் லாபம் பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை போப் லியோ கடுமையாக சாடியுள்ளார். கேமரூன் நாட்டுக்கு சென்ற போப், அப்போது பேசுகையில், மக்களின் வளங்களைத் திருடுபவர்கள், அந்த லாபத்தை மீண்டும் ஆயுதங்களில் முதலீடு செய்வதாகவும், இது ஒரு முடிவில்லாத அழிவுச் சுழற்சியை உருவாக்குவதாகவும் கூறினார்.
ஈரானின் அச்சுறுத்தலை போப் புரிந்துகொள்ள வேண்டும் :
ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை போப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அரசியல் அல்லது இராணுவ நோக்கங்களுக்காக மதத்தைப் பயன்படுத்துவதைக் கண்டித்துள்ள போப் லியோவின் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஈரான் குறித்த போப்பின் நிலைப்பாட்டுடன் தான் உடன்படவில்லை என்றும், அவருடன் மாறுபட்டு நிற்கும் உரிமை தனக்கு உண்டு என கூறினார்.
ஈரானின் தாக்குதல் ட்ரோன் உற்பத்தி 10 மடங்காக அதிகரிப்பு :

கடந்த 2025 ஜுன் மாதம் நடைபெற்ற அமெரிக்க- இஸ்ரேல் போருக்கு பிறகு 7 மாத காலத்தில் ட்ரோன்களின் உற்பத்தியை பத்து மடங்காக அதிகரித்துள்ளதாக ஈரானிய ஆயுதப் படைகளின் துணைத் தலைமை தளபதி தெரிவித்துள்ளார். கடந்தகால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள ஈரானிய ஆயுதப் படைகள் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved