Also Watch
Read this
Posted on: Jan 31, 2026 07:46 AM
By: Manigandan Raja
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மீது தீ வைத்து கொளுத்திய சம்பவத்தில், அவரது மருமகளே தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் போட்டு கொலை செய்ய முயன்றது அம்பலமானது. கணவன் உயிரிழந்து விட்டதால், வேறொரு வாழ்வை தேடிய மருமகள், பாலியல் ஆசைக்கு அழைத்த மாமனாருக்கு, தீவைத்த திகிலூட்டும் கிரைம் சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
பெட்ரோல் ஊற்றிய மர்ம கும்பல்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு பகுதியை சேர்ந்த முதியவர் ராஜேந்திரன், பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக்கிற்கு செல்ல பக்கத்து ஊரை சேர்ந்த கந்தன் பைக்கில் லிஃப்ட் கேட்டு சென்று கொண்டிருந்தார். முந்திரி தோப்பு அருகே இருள் சூழ்ந்த இடம் பார்த்து, இவர்களை வழிமறித்த காரில் வந்த மர்ம கும்பல், கந்தனை விரட்டி விட்டு, ராஜேந்திரனின் உடல் முழுக்க பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியது. உடல் முழுவதும் பற்றி எரிந்தபடி சாலையில் அலறியடித்து ஓடிய ராஜேந்திரனை அருகிலிருந்தவர்கள், மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
முதியவர் ராஜேந்திரனை தீ வைத்து எரித்து கொடூரமாக கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு, அவருடன் யாருக்கு பகை ஏற்பட்டிருக்கும் என, போலீசார் விசாரணையை தொடங்கியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் விசாரணையை அவர் வீட்டிலிருந்தே தொடங்கிய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ராஜேந்திரனை தீர்த்துக்கட்ட பார்த்தது, அவரது மூத்த மருமகள் ஜெயப்பிரியாதான் என்பது தெரிய வந்திருக்கிறது.
மணிகண்டன் என்பவருடன் பழக்கம்
ஜெயப்பிரியாவின் கணவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நோய் வயப்பட்டு உயிரிழந்ததால், தனது குழந்தைகளுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், நகர் பகுதியான பண்ருட்டிக்கு டைலரிங் கிளாஸ் சென்று வந்த ஜெயப்பிரியாவுக்கு, மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது.
பாலியல் ஆசையாக மாறி தொல்லை
இந்நிலையில், மருமகள் ஜெயப்பிரியா 24 மணி நேரமும் போனிலேயே மூழ்கி கிடப்பதை கவனித்த கணவர் குடும்பத்தார், புத்திமதி கூறி கண்டிக்கவே, மாமனார் மட்டும் கூடுதலாக கண்டிப்பை காட்டியதாக கூறப்படுகிறது. நாளடைவில் இவர்களது வீட்டுப்பக்கம் மணிகண்டன் வருவதும் போவதுமாக இருக்கவே, மருமகளிடம் மாமனார் ராஜேந்திரன் அத்துமீறி பேசியதாக சொல்லப்படுகிறது. மாமனாரின் கண்டிப்பு நாளடைவில் பாலியல் ஆசையாக மாறி தொல்லை கொடுத்ததாக கூறப்படும் நிலையில், அதனை தனது காதலனான மணிகண்டனிடம் கூறியிருக்கிறார் ஜெயப்பிரியா.
நான்கு பேர் கைது
மாலை 6 மணியானால், பண்ருட்டியில் உள்ள டாஸ்மாக்கிற்கு ராஜேந்திரன் செல்வது வழக்கம் என்ற நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்து மாமனார் கிளம்பியது குறித்து, மணிகண்டனுக்கு ஜெயப்பிரியா சிக்னல் கொடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து தனது கூட்டாளிகளான பார்த்திபன், குபேந்திரன் ஆகியோரை காரில் அழைத்து கொண்டு சென்ற மணிகண்டன், மாளிகம்பட்டு எல்லை பகுதியான முந்திரி தோப்பு அருகே இருள் சூழ்ந்த இடத்தில் வைத்து, ராஜேந்திரன் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து அவர் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தி உள்ளார். இதனையடுத்து மணிகண்டன், பார்த்திபன், குபேந்திரன், ஜெயப்பிரியா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved