Also Watch
Read this
By: Manigandan Raja

இளைஞரை தாக்கியதாக புகார் :
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வகுமார். (35) இவர் ரயில் நிலையத்தில் கேண்டீன் சப்ளையராக
பணிபுரிகிறார்.
28.02.26 மாலை அவரது வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த சூழ்நிலையில் தா.பழூர் டாஸ்மாக் மதுபான கடையில் மது வாங்கி அருந்திவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சுத்தமல்லி பிரிவு சாலையில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து பரிசோதனை செய்தபோது மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செல்வகுமாருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில் போலீசார் செல்வகுமாரை அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் மனம் உடைந்த செல்வகுமார் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து செல்வகுமாரின் உறவினர்கள் தற்கொலை செய்து கொண்ட செல்வகுமாரின் உடலை எடுத்து வந்து தா.பழூர் போலீஸ் நிலையத்தில் கிடத்தி அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செல்வகுமாரை அடித்து தாக்கி தற்கொலைக்கு தூண்டிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இறந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் போலீஸ் நிலையம் முன்பு கும்பகோணம் ஜெயங்கொண்டம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போலீஸ் நிலையத்திற்குள் போலீசாருக்கும் இறந்தவரின் உறவினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது நள்ளிரவில் போலீஸ் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆத்திரத்தில் கூடியிருக்கும் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved