Also Watch
Read this
திமுக கூட்டணியில், மதுரை மாவட்டம், மேலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுத் தொகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த தலைவரை முன்னிறுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியை பலர் பாராட்டினாலும், உள்ளூர் வேட்பாளரை நிறுத்தாதற்காக விஸ்வநாதனிடம், மேலூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மல்லுக்கட்டி துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலூர் சட்டமன்ற தொகுதி
பண்ணையார்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே காங்கிரசில் சீட் கிடைக்கும் என்ற அவதூறை சுக்குநூறாக்கி, சத்தமே இல்லாமல் ஒரு சமூக புரட்சிக்கு வித்திட்டிருப்பது சமூக நீதி பேசும் அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது.

மேலவளவு முருகேசன் படுகொலையை வரலாறு தெரிந்த யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பட்டியலினத்தை சேர்ந்தவர்களின் கைகளுக்கு அதிகாரம் செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், அவரையும் அவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஊராட்சி மன்ற நிர்வாகிகளையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசிய ரண கொடூரமான நிகழ்வு இன்றும் அப்பகுதி மக்களின் மனதில் ஆறாத வடுவாய் படிந்திருக்கிறது. பட்டியலின மக்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய இச்சம்பவம் நிகழ்ந்த மேலவளவு கிராமம் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி மேலூர் தான். பொதுத் தொகுதியாக இருக்கும் மேலூரில் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தீரத்துடன் நிறுத்தி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது காங்கிரஸ்.

மேலூர் காங். வேட்பாளர் யார்?
சாதிய அமைப்புகளின் பிடியில் சிக்கி தலைவிரித்தாடும் வன்முறையை கண்டு பொறுக்க முடியாமல் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியை மேலூரில் வைத்து தொடங்கினார் திருமாவளவன். பொதுத் தொகுதியில் பட்டியலினத்தவரை நிறுத்த திராவிட கட்சிகளே தயங்கும் சூழலில், கடந்த கால வரலாறுகளையும் அலசி ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தலித் எழில்மலையின் வெற்றியை போல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் இருந்தாலும், தேசிய கட்சிகள் இந்த விஷப்பரீட்சையை எப்போதும் கையில் எடுப்பதில்லை. இந்நிலையில் தான், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்து, மேலூர் தொகுதிக்கான வேட்பாளரை மட்டும் அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது. வழக்கம் போல சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் உட்கட்சி பஞ்சாயத்தால் வேட்பாளரை அறிவிக்கமுடியாமல் திணறி வருவதாக பேசப்பட்டது.

மாற்றமா? ஏமாற்றமா?
இதனிடையே பொன்னேரி தனித் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி. விஸ்வநாதனை, யாரும் எதிர்பாராத வகையில் மேலூர் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. கூட்டணி கட்சி ஒத்துழைப்பு, பொதுமக்கள் ஆதரவு என எதைப்பற்றியும் ஆராயாமல் துணிந்து விஸ்வநாதனை காங்கிரஸ் முன்னிறுத்தியுள்ளது. பல்வேறு கட்சிகளும் பட்டியலினத் தலைவர்களை புறக்கணித்து வருவதாக எழும் குமுறல்கள் அடங்காத சூழலில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் ஆறு தனித் தொகுதிகளை கேட்டு பெற்று வேட்பாளரை நிறுத்தியுள்ளதோடு, பொதுத் தொகுதி ஒன்றிலும் பட்டியலினத் தலைவருக்கு வாய்ப்பளித்து காங்கிரஸ் பாராட்டை பெற்று வருகிறது. தேர்தல் வரலாற்றில் காங்கிரஸின் முயற்சி மாற்றத்தை தருகிறதா? அல்லது ஏமாற்றத்தை தரப்போகிறதா என்பது மேலூர் மக்களின் கையில் தான் உள்ளது.

உள்ளூர்க்காரர் இல்லையே...
இந்நிலையில், உள்ளூரை சேர்ந்த மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு வழங்காமல் வேறொரு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை களம் காண வைத்துள்ளது ஏற்புடையதல்ல என சொந்த கட்சியினரே விஸ்வநாதனுக்கு எதிராக தெருத் தெருவாக போஸ்டர் ஒட்டியதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் ஆலோசனைக்கூட்டத்துக்கு வந்த விஸ்வநாதனை முற்றுகையிட்டு அவருக்கெதிராக முழக்கமிட்டதால் தர்ம சங்கடத்திற்கு ஆளானார்.

வேட்பாளர் தேர்வு பின்னணியில் மாணிக்கம் தாகூர் இருப்பதாகவும், அவரால் தான் கட்சி அழியும் நிலைக்கு சென்றுள்ளதாக மாவட்ட நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த முறை மாமனார் வெற்றி பெற முடியாமல் போன துக்கத்தில், இந்த முறை யாருமே வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்திலேயே விஸ்வநாதன் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

மாணிக்கம் தாகூர் பாஜக கைக்கூலியாக செயல்படுவதாகவும் கொந்தளித்தனர். இதனிடையே, சொந்த கட்சியை சேர்ந்த யாரும் இல்லாமல் கூட்டணி கட்சியினர் தயவுடன் சென்று விஸ்வநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved