Also Watch
Read this
ராஜ்யசபா சீட் தருவதாக கூறிவிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் ஏமாற்றி விட்டதாக, கூட்டணி குறித்த ரகசிய ஒப்பந்த ஆவணத்தோடு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ள நிலையில், அதற்கு இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். 2026ல் தங்களுடன் தேமுதிக கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால், இடம் தருவதாக பகிரங்கமாக சொன்னதே தாம் தான் எனக்கூறிய இபிஎஸ், தற்போது ஏதோ ஒரு திட்டத்தில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதாக கூறி உள்ளார்.

ஆவணத்தை காட்டிய பிரேமலதா
திருவண்ணாமலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியதாவது;
கூட்டணி குறித்த ரகசிய ஒப்பந்தத்தை இதுவரை வெளியில் காட்டியது இல்லை. அரசியல் கண்ணியம் கருதியே ரகசிய ஒப்பந்தத்தை காட்டாமல் இருந்தேன். எம்.பி. சீட்டுக்கு இபிஎஸ் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது உண்மை. 2024 மக்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு 5 இடங்கள் என குறிப்பிடப்பட்டு ஆவணம் உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் தேமுதிகவிற்கு 1 ராஜ்யசபா சீட் எனவும் குறிப்பிட்டப்பட்டு உள்ளது. ரகசிய ஒப்பந்தத்தை காட்டும் நிலைக்கு தள்ளியதே இபிஎஸ் தான். 2024ல் கையெழுத்து போட்ட இபிஎஸ் 2025ல் செய்திருக்க வேண்டும். ராஜ்யசபா சீட்டுக்கான ஆண்டு குறிப்பிடாதது பற்றி இபிஎஸ்ஸிடம் கேட்டேன். அப்போது, ”எம்ஜிஆர், ஜெ. காலத்தில் இருந்தே ஆண்டு குறிப்பிடுவது இல்லை” எனக் கூறினார். வார்த்தை தான் முக்கியம், பேப்பர் எல்லாம் முக்கியமில்லை என்றும் இபிஎஸ் கூறினார். இபிஎஸ் கூறிய வார்த்தையை நம்பினோம், அவர் கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை. தற்போது சீட் தருவதாக எங்கே சொன்னேன்? என கூறுகிறார். வயிற்றெரிச்சலில் எங்களை ஐசியூ கட்சி என விமர்சனம் செய்கிறார் இபிஎஸ், ”மே 4ஆம் தேதிக்குப் பிறகு இபிஎஸ், ஐசியூ செல்லாமல் இருக்க கடவுளை வேண்டுகிறேன்
இவ்வாறு பிரேமலதா கூறினார்.

கூட்டணி அமைத்தால் சீட்டு
கடலூரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
தேமுதிகவிற்கு மக்களவையில் 5 இடங்கள் தருவதாக சொன்னோம். மக்களவையில் 5 இடங்கள் தரவில்லை என சொல்வது முற்றிலும் தவறு. கூட்டணியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சு என நான் பேசுவதே இல்லை. 2026ல் எங்களுடன் தேமுதிக கூட்டணி அமைத்தால் சீட் தருவதாக சொன்னோம். கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் இடங்கள் தருவதாக சொன்னேன். தற்போது ஏதோ திட்டமிட்டு திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. திமுகவை பகிரங்கமாக எதிர்த்த தேமுதிக தற்போது அவர்களுடனேயே கூட்டணி அமைத்துள்ளது. விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து கொச்சைப்படுத்தி பேசியவர் வடிவேலு. விஜயகாந்தை கொச்சைப்படுத்தியவர்களோடே கூட்டணியா?
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved